"அண்ணாச்சி, சௌக்கியமா இருக்கியளா?"
"என்னடே! நீ எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன் அண்ணாச்சி உங்க புண்ணீயத்துல"
"இப்படி அடுத்தவன் புண்ணியத்திலயே கடைசி வரைக்கும் காலத்தைக் கடத்துங்கடே"
"என்ன செய்யச் சொல்லுதிய அண்ணாச்சி? நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மம்லா?!"
"எலே! என்ன இதுக்கே இப்படி அலுத்துக்கிடுத? உலகத்துல உன்னை விட பாவப்பட்டவன் எத்தனை பேரு இருக்கான்னு யோசிச்சுப் பாருடே!அப்ப நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்ட சாலின்னு உனக்கே தெரியும்?"
"என்னத்த அண்ணாச்சி சொல்லுதிய?"
"எலே! நீ தமிழ்ப் பதிவெல்லாம் படிக்கியா?"
"என்னத்துக்கு? நான் கொஞ்சம் நல்லா இருக்கது கூட உங்களுக்குப் புடிக்கலையாக்கும்? எதுக்கு இப்ப அதப் பத்திக் கேக்கிய?"
"ஏன் கேக்கம்னா, அங்குன நம்மூருகாரப் பய ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுதாண்டே! என்னத்த எழுதுதோம்னே தெரியாம ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுததைப் படிக்குறவங்களப் பத்தி யோசிச்சுப் பாருல மக்கா! அப்ப தெரியும் உன்னை விட பாவப்பட்ட ஜென்மங்களும் இருக்குன்னு"
"அப்ப இந்தக் கொடுமை தொடங்கி இன்னைக்கு ஏழாவது வருசத் துவக்கமா? அடக் கடவுளே? யாரு அண்ணாச்சி அந்தக் கொடுமைக்கார பய?"
"அதாம்டே நம்ம சாத்தான்குளத்துக்காரப் பய இருக்காம்லாடே! ஊரு பேரைக் கெடுக்குததுக்குன்னே எழுதிக்கிட்டு கெடக்கான் பாத்துக்க. அவங்கப்பா அம்மா மேல என்ன கோவமோ தெரியல. டிசம்பர் ஒம்பதாம் தேதி அவுக கல்யாண நாளாம். அவங்க கல்யாண நாளும் அதுவுமால்லா பதிவு தொடங்குறதுன்னு ஒரு அராஜக முடிவெடுத்திருக்கான்?!"
"'பேரு சொல்லுத புள்ளையா இல்லாம போனாலும் பேரைக் கெடுக்காத தொல்லையாவது இருந்து தொலைடே!ன்னு அவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?"
"அங்கதாம்ல மக்கா பிரச்னையே இருக்கு?"
"என்ன பிரச்னை.அவன் ஒரு முடிவெடுத்துட்டா அவன் பேச்சை அவனே கேக்க மாட்டானாம்ல"
"அப்படின்னா "இனிமே தொடர்ந்து பதிவை எழுதுறேண்டே!"ன்னு முடிவெடுக்கச் சொல்லுங்க. அப்படியாவது அவன் பேச்சை அவனே கேட்காம எழுதாம இருக்கானான்னு பார்க்கலாம்"
"எனக்கும் ஆசைதான். ஆனா, ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவா போவுது?"
*****
இதுவும் பழைய பதிவுதான். 2004ஆம் ஆண்டில் துவங்கிய கோட்டித்தனம் இன்னமும் முடியாமல் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த, கற்றுக் கொண்ட, இழந்த, பெற்ற விசயங்கள் தாராளம். ஏராளம்.
// அறிவுபூர்வமா, ஆக்க பூர்வமா, இலக்கிய சாம்பார்,ரசம் எல்லாம் சொட்டும் வகையில் எழுதிட மாட்டேங்குற ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் என்னால உத்தரவாதமாத் தர முடியும். அதனால பயப்படாதீங்க!! //
இதுதான் என் வலைப்பூவை துவங்கியபோது நான் மக்களுக்களித்த வாக்குறுதி அதை எப்போதும் தொடர்வேன் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.
நல்லா இருங்கடே!!