08 August 2009

சிநேகிதிகளின் கணவர்கள்



மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைப்பற்றி நான் விரிவாகச் சொல்லிதான் நீங்களெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. வார்த்தைகளுக்குள் வாழ்க்கையின் சூட்சுமங்களை சுவைபடச் சொல்லும் தேர்ந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர் அவர்.

சமீபத்தில் 'பண்புடன்' குழுமத்தில் இந்தக் கவிதையைப் பற்றி பேசினோம்.இந்தக் கவிதை எனக்கு வெகுவாகப் பிடித்து விட்டதால் இதற்கு ஒலிவடிவம் கொடுத்து அதனை மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கே அனுப்பினேன். கேட்டு விட்டு உடனே பதிலெழுதிய அவர் "பொதுவாகக் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் வாசித்திருகிறீர்கள். சில இடங்களில் சற்று வேகமாக வாசித்திருக்கிறீர்கள். பத்திகளுக்கு இடையே கொஞ்சம் நிதானம் தேவை. இசை சற்று தூக்கலாக இருப்பதுபோல உள்ளது. இரண்டையும் சற்று சரிசெய்தால் பொருள்கொள்ள உதவியாக இருக்கும்" என்று உடனே பதிலெழுதினார்.

அவருக்கு திருப்தியில்லாமல் வலையேற்ற எனக்குச் சம்மதமில்லாமல் இருந்ததால் அவர் கேட்டிருந்த சில மாற்றங்களைச் செய்து மீண்டும் அனுப்பினேன். "புதிய ஒலிவடிவம் கேட்டேன். மிகவும் நன்றாக வந்திருக்கிறது. முந்தைய குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு நேர்த்தியாக இருக்கிறது. என் சிநேகிதிகளுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று பதில் எழுதியிருந்தார். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

முன்னர் உலகத்தமிழ்செய்திகளுக்காக கவிதை வாசித்தபோது என் தந்தையாரும் உடனிருந்தார். நான் கவிதை வாசித்தபோது" என்னடா வாசிக்கிறே? ஒரு பாவனையும் இல்லாமல்? கொஞ்சம் உணர்வுபூர்வமாக வாசிக்கக் கூடாதா?" என்றார். "உணர்வுபூர்வமாக வாசிக்க இது என்ன நாடகமா? இது கவிதை. கவிதையில் அதைக் கூட்டுகிறேன் இதைக் குறைக்கிறேன்' என்று சொல்லி அதை இல்லாமல் செய்து விடக் கூடாது" என்று வீர வசனம் பேசினேன். வாசிக்கத் தெரியவில்லை என்று எப்படி நேரடியாக ஒப்புக்கொள்வது? இம்முறை கவிதையை அவருக்கும் அனுப்பியிருந்தேன்.

"அருமை. அருமை" என்று பதிலெழுதியிருந்தார். வாப்பாவிடமிருந்து இதனைப் பெறுவது அது எத்தனை சிரமம் என்பது எனக்குத்தான் தெரியும். எனவே, உண்மையிலேயே காற்றில் மிதந்து கொண்டிருப்பது போலுணர்ந்தேன்.அந்த தைரியத்தில்தான் இதனைக் குரல் பதிவாகவே இங்கே இடுகிறேன்.

கவிதையை உபயோகப்படுத்த மனமுவந்து சம்மதித்த மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், இசை வடிவம் தந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் :-) நெஞ்சம் நிறைந்த நன்றி!!

இனி கவிதையைக் கேளுங்கள். பொறுமையில்லாதவர்கள் கவிதையை வாசித்து மகிழுங்கள்



சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

எப்போதும் உருவாகிவிடுகிறது

ஒரு சதுரங்கக் கட்டம்


ஒரு கலைக்கமுடியாத பாவனையின்

மர்ம நிழல்


ஒரு சர்க்கஸ் கோமாளியின்

அபாயகரமான சாகசங்கள்

ஒரு அபத்த வெளியில்

விரிக்கப்பட்ட வலை


சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

என் சிநேதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்

அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை

மறுதலித்துவிடுகிறேன்

அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்

அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்


சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகிதங்களில்

நாம் அனுமதிக்கப்படுவது

ஒரு கருணை


அது நம்மிடம் காட்டப்படும்

ஒரு பெருந்தன்மை


சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு

காட்டப்படும் பெருந்தன்மை

நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்

ஒரு தந்திரமான விளையாட்டு


சிநேகிதிகளின் கணவர்களுடனான


சிநேகங்களில்

என் சிநேகிதி எப்போதும்

பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்

பேசுகிறாள்


உரையாடல்களின்

அபாயகரமான திருப்பங்களை

பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்


எதைப் பற்றிய பேச்சிலும்

கணவரைப் பற்றிய

ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்


ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்

மிகவும் ஆயாசமடைந்து

கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது

நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்


சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களின் இடையே இருப்பது

ஒரு உறவல்ல

இலக்குகள் ஏதுமற்ற

ஒரு பந்தயம்


ஒரு அன்னியனுக்குக் காட்டும்

வன்மம் மிகுந்த மரியாதை


ஒரு சட்டப்பூர்வ உரிமையாளனுக்கு எதிராக

ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்


தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட

ஒரு மீன் முள்


சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை

மாற்றிக் கொள்கிறேன்


அவர்களது எல்லா அக்கறைகளையும்

எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்

சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது

அவர்களின் கணவர்களுடன் பேச

ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன


சிநேகிதிகளின் கணவர்களுடனான

சிநேகங்களில்

சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை

நேசிக்கக் கற்றுக் கொண்டேன்


எவ்வளவு குடிக்க வேண்டும்

ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்

நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்

எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்

என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்


நான் குழப்பமடைவதெல்லாம்

சிநேகிதியை பெயர் சொல்லாமல்

எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை

வெறும் பெயர்களாக மட்டும்

எப்படி உச்சரிப்பது என்று


ஒரு சிநேகிதியை
‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

34 comments:

நிலாரசிகன் said...

அருமையான கவிதையை அழகாக குரல்பதிவு செய்திருக்கிறீர்கள் அண்ணாச்சி..

ஆசிப் மீரான் said...

நன்றி நிலாரசிகன்! கதைப் போட்டியில் தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துகள்!!

ஜோ/Joe said...

ஓ! நீங்க தானா ?

ஏதோ ஒரு யூடுயூப் தேடலில் மாட்டி ஏற்கனவே கேட்டுவிட்டேன்.

நன்றாக இருந்தது!

ச.செந்தில்வேலன் said...

அண்ணாச்சி மிக அருமையாக கவிதையை ஒலிப்பதிவு செய்துள்ளீர்கள்! கவிதை அழகு! பம்பாய் இசைத் தேர்வும் மிகப் பொருத்தம்!


இது போன்ற கலந்துரையாடல்கள் எப்போது நடந்தது, நடக்கிறது?

கிருத்திகா said...

ரொம்ப நல்லாருக்கு.. மிகவும் அருமையான கவிதை... கவிதையாய் வாசித்த போதே பலமுறை வாசிக்கத்தூண்டிய கவிதை.. சிக்கல்களற்ற வார்த்தைகள் என்று நினைத்திருந்த சில இடங்களில் உங்களது கடின உச்சரிப்பு அவ்வார்த்தைகளை சிக்கல்களாக்கிக்காட்டுகிறது.. மற்றபடி நல்ல வடிவமைப்பு...

வெண்பூ said...

அருமையான கவிதைக்கு உங்கள் குரல் மூலம் உயிர் வந்தது போல் உள்ளது அண்ணாச்சி.. பாராட்டுகள்..

மின்னுது மின்னல் said...

நல்ல குரல் வளம் அண்ணாச்சி !!!

வாழ்த்துகள் !!

A said...

நன்றி ஆசிப் மீரான்...

குசும்பன் said...

அண்ணாச்சி சூப்பர் அண்ணாச்சி இருந்தாலும் எனக்கு தெரிஞ்சவரை கவிதை வாசிப்பது அல்லது கவிதை சொல்வது என்றால்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில் எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்
சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில் எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்

ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்
ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்

ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை


இப்படி இரண்டு இரண்டு முறை சொல்வதுதானே மரபு:)))

மரபை மீறி இருக்கிறீர்கள் அண்ணாச்சி:)

Anonymous said...

ஹா ஹா ஹா! என்னாடா சிரிக்கிறேனே என்று யோசிக்கிறீங்களா?

அய்யனார் வந்து அவரோட கவிதைக்கும் இப்படி உங்களை குரல் கொடுக்க சொன்னா நீங்க எப்படி ஓடுவிங்கன்னு நினைச்சேன் அதான் சிரிப்பு வந்துவிட்டது:)))

Thekkikattan|தெகா said...

//A said...

நன்றி ஆசிப் மீரான்...//

அது நானேதான் ஆசிப் மின்னஞ்சல் ஐடி குழப்பம் :-)

காலப் பறவை said...

10 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்.... அத்தனை அருமை :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்//

மிகவும் சிறப்பான ஒரு கவிதை, அரிதான பாடுபொருள்.

நீங்கள் அதற்கு இன்னும் சிறப்பு செய்துள்ளீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு அந்தக்கவிதையை ரசித்திருப்பீர்கள் எனப் புரிகிறது.. ஆசிஃப்.!

(உன் கணவனுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டிய சூழல் நேர்ந்த போது நீ பதற்றமடைவாயோ என்று நினைத்து நினைத்தே நான் பதற்றமடைந்தேன் --- இது எப்போதோ நான் கிறுக்கியது)

துபாய் ராஜா said...

அண்ணாச்சி,நல்ல கவிதையை நல்லா வாசிச்சிருக்கிய்.நல்லாருக்கு.

பின்னணி இசையில ஏ.ஆர்.ரகுமான் கலக்கிப்புட்டாரு.... :))

Seemachu said...

நல்ல கவிதை. கவிதைக்கு உங்கள் குரல் வசீகரமாய் இருந்தது..

இப்படி சில கவிதையெல்லாம் உங்களைப் படிக்க வெச்சு ஒரு ஆடியோ/வீடியோ சிடீ போடலாம்னு இருக்கேன்... வேற யாராவது கேட்டால் “சீமாச்சுக்கு காண்ட்ராக்ட் கொடுத்துட்டேன்னு” சொல்லிடுங்க :)

தமிழ்ப்பறவை said...

அருமை... கவிதையும், குரல் வடிவமும்....
தொடருங்கள்...

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் அண்ணாச்சி. ஆபிஸ்ல அந்த கவிதையை படிக்க மட்டுமே முடிந்தது. அறையில் கேட்டுகொண்டே படித்த போது கவிதை இன்னும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

சினேகிதி said...

நல்லா இருக்கு மனுஸ்யபுத்திரனின் கவிதையும் அதை நீங்கள் வாசித்ததும்.

manasu said...

அருமை ஆசிப் அண்ணாச்சி.

ஒரு இடத்தில் ஸ்நேகிதங்களில் என்பதை - ஸ்நேகங்களில் என்று வாசித்திருக்கிறீர்கள்.

kanam என்பதை ganam என்று உச்சரித்திருப்பதாய் நினைக்கிறேன்.

/தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட ஒரு மீன் முள்/

இது சரியாய் முடியாதது போல் இருக்கிறது.

/கணவர்கள் மட்டுமே/ இங்கே விட்ட சிறு இடைவெளியய்

/யோசிக்கத் தொடங்குகிறாள்/

இங்கே விட்டிருக்கலாம் என்று தோன்றியது.

இவை என் தோணல்கள் மட்டுமே.

மீண்டும் ஒரு முறை அருமை ஆசிப் அண்ணாச்சி.

சரவணகுமரன் said...

கவிதையும் அருமை... உங்கள் குரலும் அருமை... ஒலி சேர்ப்பும் அருமை...

குசும்பன் said...

//Anonymous said...
ஹா ஹா ஹா! என்னாடா சிரிக்கிறேனே என்று யோசிக்கிறீங்களா?
//

அவ்வ்வ் அண்ணாச்சி இந்த கமெண்ட் நான் போட்டது எப்படி, அனானிமஸ் ஆச்சுன்னு தெரியலை!

அ.மு.செய்யது said...

இனிமையான அனுபவம்...மனுஷ்யபுத்திரனை உங்கள் குரலில் கேட்பது.

பகிர்வுக்கு நன்றி ஆசிப் அவர்களே !!!

முபாரக் said...

அண்ணா,
உங்கள் இடுகையிலிருந்து கேட்க இயலவில்லை. பல தில்லாலங்கடி வேலைகள் செய்து இங்கே அலுவலகத்தில் கேட்கவிடாமல் செய்திருக்கிறார்கள்

மின்னஞ்சலில் அனுப்ப இயலுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்னால் ஒலி வடிவில் கேட்க முடியவில்லை, எனினும் அந்த கவிதையை படிக்க கொடுத்ததற்கு மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

குரல் கேட்க்கவில்லை.

ஆனால்


(சு)வாசித்-தேன்.

இப்படியான வரிகளில் வாழ்ந்தவனில் நானும் ஒருவன்.

மதன் said...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்!

கலை said...

அருமையான, ஆழமான கவிதையை, அதனை தெளிவாகச் சொல்லும் அருமையான குரலில் கேட்க முடிந்தது.

திரு/Thiru said...

கவிதையும், குரலும், வாசிப்பும், இசையும் அருமை. வாழ்த்துக்கள் ஆசிப் அண்ணாச்சி! :)

தேவதாசன் dilshaad said...

வணக்கம் ஆசிப் மீரான்! கவிதையை ரசிப்பதிலும்விட உங்கள் குரலைக்கேட்டு மகிழ்ந்தேன். நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. முதலில் ரஹ்மானை எங்கே சந்தித்தீர்கள் என்று யோசித்தேன்.பின்புதான் தெரிந்தது பம்பாயில் சுட்டதுவென்று. அருமை. குரலில் நல்ல கம்பீரம். ஒலிவாங்கியை சற்று தூரத்தில் வைத்திருக்கலாம். வாழ்த்துக்கள்!

ஹரன்பிரசன்னா said...

வாய்விட்டு வாசிப்பதற்கென்று சில கவிதைகள் இருக்கின்றன. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் மனதால் வாசிக்கத் தக்கவையே அன்றி, வாய்விட்டு வாசிக்கத் தகுந்தவை அல்ல. இந்தக் கவிதை அதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

r.selvakkumar said...

அபாராம்!
முதலில் கவிதையின் கரு
இரண்டாவது கருவை சுமந்த வார்த்தைகள்!
அதுவும் கடைசி வரி . . .

என் சிநேகிதிகளுக்கெல்லாம் இதை அனுப்பி வைக்கப்போகிறேன்.
அவர்களுடைய கணவர்களுக்கு அனுப்புவதைப் பற்றி யோசித்தாலே கலவரமாக இருக்கிறது.

இந்த வரிக்கு அப்புறம் இசையுடன் கேட்கப்போகிறேன்.

நல்ல அனுபவத்தை தந்த கவிதைக்கு நன்றி!

Anonymous said...

yeppadiyo ungalluku vapavin parattu kedithuvittathu. 20 varusham kadanthum neeku thoopannirin parattu kedikeveyyelli.

Illathavannu than theriyum antha vali.

Naan London vasi, tamilnadu purvigam, thattar matathu pazhiya nanbani santhithapothu keeditha santhosham pol irrunthathu ungalin blog.

Nantri

manjoorraja said...

ஈரோடு கதிர் பதிவிட்ட பஸ்ஸின் மூலம் இன்று மீண்டும் ஒரு முறை கேட்கவைத்துவிட்டீர்கள் நன்றி.

Kathir Erode - Buzz - Public
நண்பர்களின் மனைவிகள் நட்பாவதைவிட தோழிகளின் கணவர்கள் நட்பாவதில் ஏதோ மனத் தடங்கல் இருக்கிறது! :)

pavithra said...

r selva kumar. Intha oru page kavithaya neenga 4 line commentla solli irukinga. "ithai en snehithigaluku anupa pohiren.
snehithigalin kanavargaluku anupuvathai pattri yosikave kalavaramaha irukirathu"
Super

LinkWithin

Blog Widget by LinkWithin