28 February 2005

மறக்க முடியாத நேர்முகம்..

சில ஆண்டுகளுக்கு முன் நித்யஸ்ரீ மகாதேவன் இங்கே வந்திருந்தபோது கர்நாடக இசை பற்றி எதுவுமே தெரியாத நான் அவரை நேர்முகம் காண வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பாடியதில் அவர் பிரபலம் என்பதால் அதைப் பற்றி ஜல்லியடித்தால் போதுமானதாக இருந்திருக்கும் என்றாலும் பெயர் கேட்ட ஒரு கர்நாடக இசைப் பாடகியிடம் அம்மாதிரியான் கேள்விகள் கேட்பது அபத்தம் என்று பட்டது. ஆகவே ஹரியண்ணனுக்கு அஞ்சல் அனுப்பி உதவி கோரியிருந்தேன்.

"இசைக்கு மொழி முக்கியமா என்று கேளுங்கள். பொதுவாகவே தேவை யில்லை என்ற பதிலே வரும். அப்படி வருமானால்,'இசைக்கு மொழி தேவை. கேட்பவனுக்குத் தேவையா இல்லையா என்பது இங்கே விவாதத்துக்குரிய பொருளே அன்று. இசைப்பவன், முதலில் தான் என்ன பாடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பாட்டு சொல்கின்ற பொருளை, அதன் உணர்வை உள்ளே வாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பொருளில் தான் கரைந்து போக வேண்டும். அப்படி ஒரு நிலையில் பாடுபவன் பாடினால், கேட்பவனுக்கு மொழி தேவை இல்லைதான். உணர்வுகளைப் புரிந்து கொள்ள இசை உதவும் " என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்கள் பதிலைப் பிடுங்குங்கள் என்று ஆலோசனை சொல்லியிருந்தார். இது முக்கியமான கணையாகத் தொடுத்தது போக வேறு சில நல்ல கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.

நானும் இதே அளவில் கேள்விகளைத் தயாரித்துக்கொண்டு போயிருந்தேன். மிகப் பெரிய பாடகியாக இருந்தபோதும் மிகவும் பணிவோடு எனது முகமன்களை ஏற்றுக் கொண்டார் அவர். நேர்முகம் ஆரம்பமானது.

"பொதுவாகவே இசைக்கு மொழி தேவையில்லை என்கிறார்களே, அது பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று கேள்வியைத் தொடங்கி விட்டு "இல்லை" என்று சொன்னதும் கேட்கப்பட வேண்டிய அடுத்த கேள்விக்கு என்னைத் தயார் செய்து கொள்வதற்குள் வந்தது பதில். "மிக அவசியம் தேவை" என்று. ஆடிப் போனேன் நான்.

எனது அடுத்தடுத்த கேள்விகள் அவர் இல்லையென்று சொன்னால் அவரை எப்படி மடக்குவது என்பதிலேயே இருந்ததால் என்ன கேட்பதென்று புரியாத சூழல். நிகழ்ச்சி வேறு நேரடி ஒலிபரப்பு என்பதால் அந்தக் குளிர்ப்பதன சூழலிலும் அநியாயத்துக்கு வியர்த்தது. சமாளித்துக்கொண்டு "அது எப்படி?" என்றேன்.

ஹரியண்ணன் சொன்ன அதே கருத்துக்களைத்தான் அவரும் சொன்னார். "கேட்பவர்களுக்கு வேண்டுமானால் மொழி அவசியமில்லாமல் இருக்கலாமேயொழிய பாடுபவர்களுக்கு மொழி மிக அவசியம்.. குறைந்தது என்ன பாடுகிறோம் என்பதையாவது தெரிந்து கொண்டால்தான் பாடும்போது அதை உணர்ந்து பாட இயலும்" என்று சொன்னார் அவர்.

"சில கீர்த்தனைகளைப் பாடும்போது இறைவனைத்தான் பாடுகிறோம்' என்று புரியும்.. ஆனாலும் 'இறைவா!' என்று அழைத்துப் பாடும்போது இன்னும் நெருக்கமாக அதனை உணர முடியும்" என்று சில பாடல் வரிகளைப் பாடிக் காட்டினார்.

'இந்துஸ்தானி இசைக்கும், கர்நாடக இசைக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றித்தான் பொதுவாக எல்லாரும் கேட்பார்கள் என்பதால் அவற்றிற்கிடையில் இருக்கும் வேறுபாட்டைப் பற்றிக் கேளுங்கள்' என்று ஹரியண்ணன் சொன்னது நினைவுக்கு வந்து கேட்டேன். மிக விரிவாகப் பாடிக் காட்டி விளக்கினார். இந்தக் கழுதைக்குக் கற்பூர வாசனை தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்களேன். என்றாலும் அவர் பாடிக் காட்டியது மிக இனிமையாக இருந்தது.

"ஏன் பொதுவாகவே கச்சேரிகளில் தமிழ்ப் பாடலைப் பாடுவதில் தயக்கம் காட்டுகிறீர்கள்?" என்று என் கச்சேரியை ஆரம்பித்தேன். "இல்லை. இப்போது மாற்றம் வந்திருக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார்கள்" என்று பதிலளித்தவரிடம், "தமிழ்ப் பாடல் என்றால் பாரதி மட்டும்தானா? பாரதிதாசனைச் சேர்த்துக் கொள்வது இல்லையா?" என்று கேட்டு வைத்தேன்.

"பாரதிதாசன் பாடல்களுக்காக முழுமையாக ஒரு 'ஆல்பமே' செய்திருக்கிறேன்" என்று அவர் சொன்னபோது புழு மாதிரி உணர்ந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் அவரைப் பற்றி நான் தெரிந்துகொண்டிருந்தது மிகக் குறைவே என்பதை உணர்ந்தேன். நேரடி ஒலிபரப்பிலேயே அதனைக் குறிப்பிட்டு, "எனது அறியாமையை தயவுசெய்து நீங்கள் மன்னிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டேன்.

அதன் பின்னர் அவர் சாதகம் செய்வது, அவரது திரைப்பட நுழைவு, சின்னத்திரையில் அவரது குரல் ஆதிக்கம் ('சித்தி' தலைப்புப் பாடலைப் பாடுவதற்கு அழைப்பு வந்தபோது உடல்நலக் குறைவாக இருந்தும் அவருக்காகக் காத்திருந்து பதிவு செய்தார்களாம்) என்று பொதுவான விசயங்களுக்குத் திரும்பி விட்டோம். இடையிடையே அவரைச் சில பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டபோது சளைக்காமல் உற்சாகமாகப் பாடினார்.இரண்டடி தொலைவில் அவர் பாடக் கேட்டு ரசிப்பது சாதாரண விசயமா என்ன? அதுவும் காசு பணம் கொடுக்காமல்.

ஒலிபரப்பு முடிந்து வெளிவந்த பின் அவரது ஒத்துழைப்பிற்காக நன்றி சொன்னேன். ஒலிபரப்பின் நடுவில் தவறுக்காக மன்னிப்புக் கேட்ட தைரியத்திற்காக என்னைப் பாராட்டினார் அவர். அத்தனை பெரிய பாடகி மிக இயல்பாகவும், உற்சாகமாகவும் உரையாடிய மகிழ்ச்சி எனக்கு.

மறக்க முடியாத நேர்முகம் அது

22 February 2005

மின்னஞ்சல் கதைகள்

மின்னஞ்சல்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்படுத்தியிருக்கும் புரட்சிகரமான மாற்றங்கள் பற்றி கருத்து வேறுபாடுகள் யாருக்குமிருக்க முடியாது. ஆனால், எல்லா ஊடகங்களுக்கும் ஏற்படும் சிதைவுகள் மின்னஞ்சல்களுக்கும் ஏற்படுமென்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

இப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் 65 விழுக்க்காடும் நேரிடையாக குப்பைத் தொட்டிக்குத்தான் போகின்றன. வருகின்ற கடிதங்களின் லட்சணம் அப்படி. என் ஆண்மை விருத்திக்கும், எனது வீரிய சக்திக்கும் உரமேற்ற இலவச அஞ்சல் செலவுடன் எனக்கு மாத்திரைகள் அனுப்பி வைக்க விதம் விதமாக மருந்து நிறுவனங்கள் ஒருபுறமென்றால், தெரு விளக்குகளுக்குப் பக்கத்தில் நின்று வியாபாரம் செய்யும் பெண்களின் இணையப் பதிப்புகள்
விடுக்கும் அழைப்புகள் மறுபுறமென குப்பைத் தொட்டிக்கு அதீத தீனிதான்.

இந்தக் கொடுமை போதாதென்று, 'காசா, பணமா, சும்மா அனுப்பி வைப்போம்' என்று நண்பர்கள் அனுப்பி வைக்கும் மூசா நபி காலத்து நகைச்சுவைத் துணுக்குகள் அல்லது கேள்வி பதில்கள்.. இவையும் போதாதென்று கடந்த ஐந்து ஆண்டுகளாக மகளின் புற்று நோய்க்காக உதவி தேடும் அபலைத் தாயின் கண்ணீர் கடிதம் ஐயாயிரத்து ஐம்பத்தைந்தாவது தடவையாக..

எங்கோ ஆப்பிரிக்காவில் அரசாங்க சொத்தை எனது வங்கிக்கு மாற்றி 15 சத்வீதம் என் பங்காகத் தர விழையும் முகம் தெரியாத மனிதர்கள்.. இவற்றையெல்லாமாவது ஒரு அளவுக்கு சகித்துக் கொள்ளலாம். ஆனால், சகிக்க முடியாதது மின்னஞ்சல்கள் மூலமாகப் பரப்பப்படும் வதந்திகள். ஐயகோ!!!

நேற்று தனது மின்னஞ்சல்களைப் பர்த்துக் கொண்டிருந்த எனது துணைவியார் திடீரென என்னை அழைத்து அவருக்கு வந்திருந்த மின்னஞ்சல் ஒன்றைக் காட்டினார். துபாயின் பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் 4 வயது பெண்குழந்தை ஒன்று காணாமல் போனதாகவும், அதன் பெற்றோர் புகார் செய்தபின் காவல்ர்கள் அந்தக் குழந்தையைத் தேடோ தேடென்று தேடியதாகவும் கடைசியில் அந்தக் குழந்தை உடை களைந்த நிலையில் கழிப்பறையில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், 'நீங்கள் நினைப்பது போல துபாய் அத்தனை பாதுகாப்பில்லை' என்ற எச்சரிக்கைக் குறிப்போடும் வந்திருந்தது அந்த அஞ்சல். அனுப்பியிருந்தவர் என் துணைவியின் தோழி.

நம் பெண்களுக்கு முன்னெல்லாம் வாய் வழியாக வம்பு பேசுவதில் இருந்த ஆர்வம், பின்னர் தொலைபேசிக்கு மாறியபின், பேசிப் பேசி வாய்வலிப்பதாலோ என்னவோ இலகுவாக மின்னஞ்சலுக்கு மாறி விடுகிறார்கள். ஒரு சொடுக்கின் மூலம் துபாயின் பாதுகாப்பற்ற தன்மையை தனது தோழிக்கு அறிவித்து விட்டோமென்று ஆறுதல்.

அதைப் படித்து விட்டு இந்தத் தோழி என்னிடம்' "பார்த்தீர்களா?" என்று தொடங்கியது, "பார்த்தேன். குப்பைத் தொட்டியில் தள்ளு அதை. இனிமேல் இம்மாதிரி செய்திகள் வந்தால் படித்து விட்டு நீயே கு.தொ வுக்கு அனுப்பு. இம்மாதிரி வதந்திகளை வாசித்து விரயம் செய்வதற்கு எனக்கு நேரமில்லை" என்று மிடுக்காகக் கூறி விட்டேன்.

அந்த பதில் என் துணைவியாருக்குப் பிடிக்கவில்லை. (நான் என்ன பேசினாலுமே பிடிக்காதென்பது வேறு விசயம்)
அதுவும் 'உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லை' என்று என் துணையாளையும், அவரது தோழியையும் ஒரு சேர விமர்சித்தது விளைவிக்கப் போகும் அபாயத்தை அறியாமல்.

'ஏன், இப்படி செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் என்ன தப்பு? இங்கே பத்திரிகை செய்திகள் தணிக்கை செய்யப்படும் நிலையில் இதுபோன்ற செய்திகள் மூலம் கிடைக்கும் எச்சரிக்கை நல்லதுதானே?" என்று சில நியாயமான கேள்விகளை என் துணைவியார் முன் வைத்தார். என்னைப் போன்ற புத்திசாலியுடன் வாழ்வதால் கிடைக்கும் உபரியான நன்மைகளில் இதுவும் ஒன்று.

"சமநிலைச் சமுதாயத்தில்" மூழ்கிக் கிடந்த எனக்கு இது பெரும் சோதனையாகி விட்டது.
"உன் கேள்வி சரிதான். இம்மாதிரி செய்திகள் வழியாகக் கிடைக்கும் எச்சரிக்கை நல்லதுதான்" என்றேன்.
"அப்படியானால், ஏன் என்னையும் எனக்குச் செய்தி அனுப்பிய தோழியையும் கடிந்தீர்கள்?"

நல்ல கேள்வி. என் துணைவியாருக்கு நான் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில்தான் இதனையே எழுதுகிறேன்.
துபாய் அத்தனை பாதுகாப்பானதல்ல என்று செய்தியைப் பரப்ப நினைத்த ஒருவரின் கற்பனையில் விளைந்த கூற்றாக ஏன் இது இருக்கக் கூடாதென்பதற்கு யாரிடமும் விடை கிடைக்காது.

நாம் ஒரு செய்தியை வாசிக்கிறோம். வாசிக்கும்போது சுவாரஸ்யமாகத் தெரிந்தால் உடனே அதை நம்மைச் சேர்ந்தவர்களை அறிவித்தேயாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டது போல உடனே மின்னஞ்சலில் உள்ள சில பொத்தான்களை சொடுக்கி ஊருக்கெல்லாம் அதனைத் தெரியப்படுத்த முனைகிறோம். தவறில்லை.
நமக்குத்தெரிந்ததை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்ல விசய்ம்தான். ஆனால், நாம் ஒரு தகவலை அடுத்தவர்களுக்குத் தருவதற்கு முன் அதன் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து கொள்வது நல்லது.

பொத்தாம் பொதுவாக, ஒரு சிறுமிக்கு இப்படி நடந்தது என்று சொல்வது மிக எளிது.குற்றங்கள் நடக்காத நாடு என்பது எங்கும் இல்லை. ஆனால், குற்றங்கள் நட்க்கின்றன என்பதைச் சொல்வதற்காக அதுவும் பெரும் வணிக வளாகங்களில் கூட இது நடக்கிறது என்பதை உணர்த்த முனைந்த யாரோ ஒருவரின் கதையாகவே எனக்கு இது தென்படுகிறது. அது உண்மையாகவே நடந்ததென்றாலும் கூட சொல்லப்படும் விசயத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும்போது அம்மாதிரி அஞ்சல்களை அடுத்தவர்களுக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் பலன் என்ன?

என்னைக் கேட்டால், வணிக வளாகத்தில் அப்படியன்று நடந்திருக்க வாய்ப்பில்லையென்று நம்பியதால் இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எனக்கு இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் வாய் வழியாகப் பரப்பப்படும் செய்திகளின் மின்னஞ்சல் வடிவம்தான் இது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

இந்த செய்தியின் நம்பகத் தன்மைக்கு, குந்தகம் விளைவிக்கும் இன்னொரு செயல் அதன் கடைசி வரிகளில் எஞ்சி இருப்பதாகவே நான் உணர்கிறேன்.ஆகவே, கவனமாக இருங்கள் என்ற எச்சரிக்கையில் செய்தியைச் சொல்ல வந்தவனின் அக்கறையை விட பூச்சாண்டி காட்டும் வேலையின் தன்மை மிகுந்திருப்பதையே காண முடிகிறது.

போதாக் குறைக்கு, "நீங்கள் நினைப்பது போல" என்றொரு இடைச்செருகல் வார்த்தை மேலும் ஐயத்தைக் கிளப்புகிறது. துபாயில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடந்திருப்பதாக நண்பர்கள் சிலர் வாய்வழியே சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 'ஜுமைராவில் ஒரு ரஷ்யக் காரியை 5 பேர் கற்பழித்து கொன்று போட்டு விட்டார்களாம்' என்றொரு திடீர் செய்தி வரும். கொஞ்சம் குடைந்து கேட்டால், ஜுமைரா பக்கத்தில் என்று சமாளிப்பு.இன்னமும் குடைந்தால் அபுதாபி என்று இடம் மாறி மாறி கடைசியில் ஜுமைராவில் 5 பேர் ருஷயக்காரி ஒருத்தியை ஒரே வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்கள் என்று செய்தி வரும்.

கேட்ட, கிடைத்த செய்தியைக் கொஞ்சம் காது,மூக்கு வைத்துச் சொல்லும்போது கேட்பவர் வாய் பிளந்து நின்று கேட்டால் எதிரில் நின்று கதை சொல்லுபவனுக்குக் கொண்டாட்டம்தான்.'கிடைத்தாண்டா பைத்தியக் காரன்" என்று கதையை அளந்து கொட்டுவார்கள். அம்மாதிரியான அளத்தல்களில் ஒன்றுதான் இதுவும்.

"கேட்டீங்களா ஜெஸிமா, கேர·போரில்..." என்று ஏதாவது அம்மணி கதையைத் தொடங்கி முடித்ததும் என்னிடம் அதே கதை கொஞ்சம் மிகையாக திரும்பி வரும் ஆபத்து இருக்கிறது. இந்த விசயத்தில் நம் பெண்கள் சமர்த்தர்கள். அதாவது பேனைப் பெருமாளாக்குவதில் ;-)

இவ்வாறு மிகைப்படுத்தப்பட்ட கதைகளைச் செய்வதற்குக் கொஞ்சம் அவகாசமும், செய்நேர்த்தியும் தேவை. இவை இருந்து விட்டால் சமீபத்தில் துபாயில் கானல் பூங்காவில் என்று கதையளக்கத் துவங்கி விடலாம். "உழுறவன் இளிச்சவாயனா இருந்தால் மாடு மச்சான்ன்னு சொல்லுமாம்"

நம்பகத்தன்மைக்கு ஆதாரமற்ற மின்னஞ்சல்களை நம்புவதை விட்டு விட்டு, குறைந்த பட்சம் அவைகளை அடுத்தவர்களூக்கு அனுப்புவதை விட்டு நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் இறைவன் காப்பானாக!!

இதற்காகத்தான் 'மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.நமக்கு மெய்ப்பொருள் காண அவகாசம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பொய் பொருளை வினியோகம் செய்யாமலாவது இருக்கலாமல்லவா?

அதை விடுங்கள். உண்மையிலேயே இந்த சம்பவம் நட்ந்திருந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.யாரைக் குற்றவாளி என்பீர்கள்? என்னைக் கேட்டால் 'ஷாப்பிங்' மும்முரத்தில் குழந்தையைக் கவனிக்க மறந்த அந்த பெற்றோர்களைத்தான்.

காலம் கலிகாலமாயிப் போச்சு. எதுக்கும் அடுத்த த்டவை வெளியே போனா கொஞ்சம் எச்சரிக்கையாவே இருங்க!! எல்லோரும் என்னை மாதிரி நல்லவங்களாகவே இருப்பாங்களா என்ன? ;-) என்ன சொல்லுதிய?!

19 February 2005

இன்னுமொரு பொங்கல் விழா..

எதைப் பற்றி எழுதலாமென்று யோசிப்பதற்கே சில நாள் ஆகும் போலிருக்கிறது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?.
ஆனாலும் எழுதாமல் போனதற்கு அது மட்டுமே காரணமில்லை.

கடந்த ஆண்டு கவிஞர் அறிவுமதி இங்கே வந்திருந்தபோது 'இத்தனை தமிழர்கள் இருக்கிறீர்கள். இத்தனை அமைப்புகளும் இருக்கிறது. ஏன் எல்லாத் தமிழர்களும் ஒன்றாக பொங்கலையாவது கொண்டாடக் கூடாது?' என்றொரு கேள்வியை எழுப்பி விட்டுப் போனார். அதன் தொடர்ச்சியாகப் பல அமைப்புகளையும் தொடர்பு கொண்டபோது யாருக்கும் பெரிய அளவில் ஆர்வமில்லாமல் இருப்பது தெரிய வந்தது. ஆனால், சில அரசியல் சூழல்களில் சில அமைப்புகள் ஒருங்கிணையும்சாத்தியம் தெரிந்தபோது சாமர்த்தியமாக அவர்களையெல்லாம் ஒரே மேசையில் அமரவைத்துப்பேசியதில் 'பொங்கல் விழா' கொண்டாடிவிடலாம் என்று தீர்மானமாகி கடந்த ஜனவரி மாத
இறுதியில் அமோகமாகக் கொண்டாடினோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளனாக நான் பொறுப்பேற்றுக் கொண்டதால் காலையில் வெளி அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் மதியம் இலவசஉணவு அதன் பின்னர் உள்ளரங்கில் நிகழ்ச்சிகள் என்று (காலை 10 முதல் இரவு 10 வரை) திட்டம் தயார் செய்திருந்தேன்.

இந்த ஆண்டும் அதன் தொடர்ச்சியாக துபாய் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடத் தீர்மானமாகி அதன் தொடர்பாகப் பல அமர்வுகள், திட்டங்கள், புரவலரிடம் பல்லிளிப்பு என்று தொடர் பணிகள்.. ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு விழா நடத்துவதே பெரும்பாடாக இருக்கும்போது ஏழு அமைப்புகளை ஒருங்கிணைத்து விழா நடத்துவதென்பது சாதாரணமான விசயமா என்ன?

இருந்தும் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு பொங்கல் வைப்பதில் தொடங்கி ஆண்களுக்காக கப்டிப் போட்டிகள், பெண்களுக்கு கோலப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள்,குழந்தைகளுக்குத் தனியாக விளையாட்டுப் போட்டிகள் எனக் காலையிலிருந்து மதியம் 12:30 வரை வெளி அரங்கில் விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. கபடிப் போட்டிகளுக்காக 8 அணிகளை மட்டுமே தேர்வுசெய்திருந்த நிலையில் செய்தியறிந்து இன்னும் ஏராளமானோர் ஆடுவதற்குத் தயாராக வந்து எப்படியேனும் வாய்ப்பு தரும்படி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். நேரமின்மை காரணமாக அவர்களை விளையாட அனுமதிக்க முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருந்தது. அடுத்த ஆண்டு - இன்ஷா அல்லாஹ் - முழுநாள் கபடிக்காக மட்டுமே ஒதுக்கலாமென்னுமளவுக்கு நிறைய அணிகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


இம்முறையும் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளனாக சென்ற ஆண்டைப் போலவே திட்டம் தீட்டினேன்.ஒரே மாற்றம் இம்முறை காலை 9 மணிக்கே நிகழ்ச்சியைத் துவங்கினோம் என்பதுதான்

விளையாட்டு நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக இம்முறை 800 பேர் திரண்டிருந்தார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் நாங்கள் உணவுக்காக ஏற்பாடு செய்திருந்ததென்னவோ 600 பேருக்குத்தான். என்றபோதும், எந்தக் குறையுமில்லாமல் அனைவருக்கும் இலவசமாகவே உணவு வழங்க முடிந்ததை நினைத்தால் பெருமிதமாகத்தான் இருக்கிறது.. இத்தனைக்கும் இந்நிகழ்ச்சி பற்றிப் பரவலாக விளம்பரம் எதுவும் செய்யவேயில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

மதியம் உள்ளரங்கில் நிகழ்ந்த பட்டி மன்றம், 'வாங்க தமிழில் பேசலாம்' நிகழ்ச்சி(ஆங்கிலம் கலக்காமல் தமிழில் இரண்டு நிமிடம் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்), கவியரங்கம், குறுநாடகம், சிறுமிகள் அரங்கேற்றிய கண் கவர் நடனங்கள், இசை நிகழ்ச்சி என்று எல்லா நிகழ்ச்சிகளையும் 800 பேர் நிறைந்திருந்து கண்டு களித்தனர். துபாயின் சமீப கால வரலாற்றில் இப்படியரு நிகழ்ச்சி அரங்கேறியதேயில்லையென்று தைரியமாகச் சொல்லலாம்.. அந்த வகையிலும், எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விழாவைச் சிறப்பாக நடத்த முடிந்ததிலும் பெரும் நிறைவுதான்.

ஆயினும், நம்மவர்கள் இதுபோன்ற விழாக்களில் நடந்து கொள்ளும் முறையை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது. விழா நடந்த பள்ளிக்கூட வளாகத்தைக் குப்பை மேடாக்கி விட்டார்கள் நம்மவர்கள். உண்ட பின் காகிதத் தட்டை எடுத்து முறையாகக் குப்பைத்தொட்டியில் போடுவதற்குக் கூட சோம்பல் அவர்களுக்கு.செயற்கைப் புல்தரையில் புகை பிடிக்காதீர்கள் என்று பலமுறை கெஞ்சியும் புலதரை முழுக்க பீடி மற்றும் சிகரெட் துண்டுகள். அரங்கத்திற்குள் எதையும் கொண்டு செல்லாதீர்கள் என்று வேண்டிக் கொண்டாலும் அரங்கம் முழுக்க இறைந்து கிடந்த
பிளாஸ்டிக் கோப்பைகள்.

விழா நடந்தது வெள்ளிக்கிழமை. சனிக்கிழமை இங்கே வாரத்தின் முதல்நாளென்பதால் பள்ளி நிர்வாகம் கடும் கோபம் கொண்டு 'இனிமேல் அரங்கம் கேட்டு வந்தா பின்னிடுவேன்' என்று எச்சரிக்கை அனுப்பியிருக்கிறது. கூடவே புல்தரையை நாசம் செய்ததற்காக 5000 திர்ஹாம் (கிட்டத்தட்ட 60,000 இந்திய ரூபாய்) பிழையாகக் கொடுக்கவும் வேண்டுமாம். நான் தலைமறைவானதன் காரணம் இப்போதாவது புரிகிறதா?

நீல நிறத்தில் தொப்பியும் சட்டையும் போட்டுக் கொண்டிருக்கும் சின்னப் பையன் நானேதான்

08 February 2005

ஆடாத வான்கோழி

உருப்படியா கவிதை எழுதும் எல்லா கவிஞர் அண்ணாச்சிங்களும் மன்னிச்சிடுங்க.
உலகத்துலேயே மலிவா கெடைக்குர விசயத்துல ஒண்ணு கவுஜதான்னு சுடலைமாடன்
கனவுல வந்து சத்தியம் பண்ணிச் சொல்லிட்டுப் போனாரு. அதான் நானும் எழுதிட்டேன்.


உயர உயரப் பறந்தாலும்
ஆகாது ஊர்க்குருவி
பருந்தாக

கலக்கல் ஆட்டம் போட்டாலும்
ஆகாது வான்கோழி
மயிலாக

ஆயிரம் எழுதிப் போட்டாலும்
ஆகாது என் கவிதை
கவிதையாக

என்னதான் ஆகும்
என் கவிதை
எழுதித்தான் பார்க்கிறேன்
நாள்தோறும்

எழுதாமல் விட்டிருந்தால்
ஏனென்றே கேட்டு நின்று
எண்ணத்தில்
உறுத்தி நிற்கும்
என் கவிதை

எழுதி நான் வைத்தாலோ
என்ன அவஸ்தை இது
என்று
எண்ணிலாரைத் துடிக்க வைக்கும்
என் கவிதை

பொறுக்கிய வார்த்தைகளை
பொறுமையாய்
கோர்த்திணக்கி
கோட்டித்தனம் செய்தாலும்

தந்தியடித்து
தருவித்த வார்த்தைகளை
தரப்படுத்தி வைத்தாலும்

அடுக்கடுக்காய்
அடுக்கி வைத்தே
அழகு பார்த்து நின்றாலும்

வான்கோழி இதுவென்பார்
மயிலென்று சொல்லுபவர்

சொல்லுபவர் அறிவதில்லை
வான்கோழி
ஒரு நாளும்
ஆடுவதில்லையென்று

06 February 2005

'பாரதி'க்கு வாழ்த்துகள் !!

இருக்குற அமைப்புகள் போதாதுன்னு அமீரகத் தலைநகரான அபுதாபியில இன்னுமொரு தமிழர் அமைப்பு. இதஎல்லாம் தேவைதானான்னு கேள்வியெல்லாம் எடுத்து ஓரம் கட்டிட்டு நானும் நல்ல பிள்ளையா போயிருந்தேன். நல்ல புள்ளயா போனேன்னு சொன்னதுக்குக் காரணம் இருக்குங்கய்யா.வாப்பாவும் கூடவே வந்திருந்தாவ. அவங்கதான் சிறப்பு விருந்தினர். தலையிருக்க வால்
ஆடலாமா? அதனால பொத்திக்கிட்டேன்.

வேடிக்கை பாருங்க., சிறப்பு விருந்தினர் பேசக் கூடாது. மேடையேறக் கூடாதுன்னு அபுதாபியில விதிமுறை இருக்குதாம். அதாவது நுழைமதியில் வருகிற ஆட்கள் மேடையேறி பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே அனுமதியெல்லாம் பெற வேண்டுமாம். அதனால மேடைக்குக் கீழேயே பூங்கொத்தைக் குடுத்து உக்கார வச்சுப்புட்டாவ.

'பாரதி' இதுதான் இந்த அமைப்பின் பெயர். வழக்கமா அமீரகத்துல 6 மணிக்கு விழான்னா நம்பி 8 மணிக்கு போகலாம். அப்பதான் மேடை அலங்காரமே பண்ணுவாங்க. அதை உடைச்சு எறிஞ்சு சொன்ன நேரத்துக்கு விழாவைத் துவங்குற பைத்தியக்காரத்தனத்தைத் தொடங்குனது அமீரகத்
தமிழிணைய நண்பர்கள் அமைப்புதான்னு எங்க வேணும்னாலும், யார் மேல வேணும்னாலும் சத்தியம் பண்ணிச் சொல்லுவேன். அபுதாபி யிலயும் 6:30 மணிக்கு விழா துவங்கும்னு சொன்னதும் நண்பர் சுப்ஹானிடம்,"எப்படியும் எட்டரைக்குத் துவங்கிடுவீங்களா?"னு கேட்டேன். முறைத்தார்.

அபுதாபியில் தமிழ்ச்சங்கம் இருந்தாலும் அது முழுமையாகச் செயல்படாத காரணத்தாலோ, வேறு அரசியல் உள்புகைச்சலாலோ (நான் இதயெல்லாம் ரொம்பப் பாத்துட்டேன் சாமி. அம்மா-ஐயா அரசியலெல்லாம்ஜுஜுபிங்கற மாதிரில்லா அமீரகத்துல இருக்குற தமிழ்சங்கங்கள்) நெடுநாட்களாக அபுதாபியில் தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெற்ற மாதிரி தகவல் இல்லை..இருந்தபோதும் நெடுநாட்களுக்குப் பின் தானே என்கிற அலட்சியம் இல்லாமல் அரை மணி நேரம் மட்டுமே தாமதமாக ஏழு மணிக்கெல்லாம் நிகழ்ச்சியைத் துவங்கி
ஆச்சரியமளித்த 'பாரதி' குழுவினர் இதுபோல ஆச்சரியங்களை மேலும் நிகழ்த்த வேண்டுமென்பதுதான் நமது எண்ணம்.

போதாக்குறைக்கு, தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் எளிமையாக தமிழ்த்தாய் வாழ்த்தும், அதற்கான அறிவிப்பில்லாமலேயே தானாக எழுந்து நின்றதும், வாழ்த்து பாடி முடிந்ததும் கைதட்டாத கூட்டமும்
ஆச்சரியமாயிருந்தது. தொடர்ந்து மிகச் சுருக்கமாக எதற்காக இந்த அமைப்பு என்பதை எடுத்துச் சொன்னார்கள். அதைப் போன்றே அவர்களே, இவர்களே என்றெல்லாம் அழைத்து விழாவை
நீ..............ட்....................டி முழக்காமல் சுருக்கமான வரவேற்புரை, விருந்தினர் அறிமுகம் என்று எல்லாவற்றையுமே ஓரளவு தெளிவுடனேயே திட்டமிட்டுச் செய்தது வரவேற்புக்குரியதுதான்.

வழக்கம்போல இலக்கிய விழா என்று சொல்லி பட்டி மன்றத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.'வாழ்க்கையில் அதிகம் அவதிப்படுவது ஆண்களா? பெண்களா?' என்று மிக முக்கியமான தலைப்பு. வழக்கம்போல தலைப்பை விட்டு விட்டு கேட்டுப் புளித்துப் போன பழைய நகைச்சுவைத்துணுக்குகளோடு தோரணம் கட்டினார்கள் பேச்சாளர்கள். புதிதாகக் கேட்பது போல ஆர்ப்பரித்தார்கள்பார்வையாளர்கள். நல்லவேளையாக அபுதாபி நண்பன் ராமசாமி வந்ததில் கீழே சிற்றுண்டி சாலையில்வெங்காய, உருளைக்கிழங்கு, மிளகாய் பஜ்ஜிகளை வாங்கிக் கடை பரப்பி ஒரு மணி நேரம் பேசிக்
கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஒருவகையாக முதல் சுற்று, ரெண்டாம் சுற்று என்று சுற்றிச் சுற்றிப் பேசி முடித்து நாட்டாமை தீர்ப்பும் வழங்கிய பின் பூச்செண்டை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பிய போது அடுத்த நாள் காலை ஒரு மணி.

ஆனால், இதே அமைப்பினர் தொடர்ந்து பொங்கலன்று மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். மிகச் சரியாக ஏழு மணிக்கு இம்முறையும் தொடங்கினார்கள். இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். ஆனால், அப்போது நான் 'சுனாமி' காய்ச்சலால் காய்ந்து கொண்டிருந்ததால் போவதா வேண்டாமா என்று ரொம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.

'பாரதி' குழுவினரோ என்னை எப்படியாவது அழைத்துக் கொண்டு போயேயாக வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தார்கள். 'என்னால் முடியாது' என்று வெள்ளிக்கிழமை மதியம் வரை சொல்லிக் கொண்டிருந்தேன்.என்றாலும், அவர்களே ஓட்டுனரோடு சீருந்து அனுப்பி என்னை அழைப்பதற்காக
வீடு வந்தபோது 'ஒண்ணும் ஆகாது.இவ்வளவு தூரம் அவங்க கூப்பிடும்போது தைரியமாகப் போய் விட்டு வா' என்று சொல்லி அனுப்பி வைத்தது வாப்பாவாக இருந்தபோதும் மனைவியின் முகத்தில் தண்ணீரை வைத்து விட்டு வெந்நீராக மாற்றிக் கொள்ளலாம் போலக் கோபம். அதை விடுங்கள்.

நிகழ்ச்சிக்கு வருகிறேன். சொன்னது போலவே சரியான நேரத்துக்குத் துவங்கி அபுதாபி தமிழ நண்பர்கள் இசை நிகழ்ச்சியில் மிக அருமையாகப் பாடினார்கள். 25 பாடல்கள் முடியும் வரையிலும் 1000 பேர் கொண்ட அரங்கு நிறைந்து வழிந்தது. அபுதாபி கண்ட நிகழ்ச்சிகளில் இது மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக அரங்கேறியதாக அங்கிருக்கும் பலரும் என்னிடம் கருத்து தெரிவித்தார்கள்.

கொஞ்ச காலமாகவே நிகழ்ச்சிகளோ அல்லது தமிழர்கள் ஒன்று கூட வாய்ப்போ இல்லாமல் இருந்த அமீரகத் தலைநகரில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் 'பாரதி'
குழுவினருக்கு வாழ்த்துகள் உரித்தாகுக!

05 February 2005

சொல்லுங்க ஐயா சொல்லுங்க.!

"துபாயில் சுனாமி"யைப் பற்றி அவ்வளவு தூரம் பேசியதுக்குக் காரணம் இருக்கு. அமீரகத்திலிருந்து முதன் முறையாக ஒரு காலாண்டிதழ் வெளிவந்திருக்கிறது.
"இனிய தமிழ் தென்றல்" இதுதான் பத்திரிகையின் பெயர். எ.ஜே.ஆர் (ரவூ·ப்) என்பவர்தான்
ஆசிரியர். 'தினத்தந்தி' வெளியிடும் வார மலர் பத்திரிகையின் வடிவில், அளவில் அமைந்திருக்கிறது.

அமீரக அல்லது வளைகுடாவாசிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ஸ்நேகா இடம்பெற்றிருப்பது கூட அந்த வகையில் பொருத்தம்தான் :-)

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அமீரகத்தில் அ.மா.சாமி, 'தினத்தந்தி' சண்முகநாதன், 'லேனா' தமிழ்வாணன் ஆகியோர் கலந்து கொண்ட இலக்கியவிழா பற்றி மடர்குழுக்களில் எழுதப்பட்டதும், அதனைத் தொடர்ந்து ஆப்பு தன் பதிவில் 'எளக்கிய விழா' என்று நக்கலடித்திருந்ததும் உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், அப்போது உருவான செயல்திட்டம்தான் இன்று 'இனிய தமிழ் தென்றல்' உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னு நெனப்பீங்க. இந்தப் பத்திரிகையின் துவக்கவிழாவிற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். அடுத்த நாள் நடைபெறவிருந்த முப்பெரும் விழாவின் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால்
விழாவிற்கு சற்று தாமதமாகத்தான் செல்ல முடிந்தது என்னால். நான் செல்வதற்கு முன்பாகவே பத்திரிகையை வெளியிட்டு விட்டார்கள். என்றாலும், எனக்குக் கிடைத்த 'தென்றலை' எடுத்துப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதில்,
"துபாயில் சுனாமி" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த துணுக்கு செய்தி என்னை துணுக்குறச் செய்தது. எப்படி இதனை வெளியிட்டார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

இதற்கிடையே விழாவில் பேச வந்தவர்கள் எல்லாம் 'இது போலப் பத்திரிகையை வாழ்நாளில் கண்டதுண்டா?' என்பது போலப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு விமர்சனமும் இல்லாமல், எதனால் இந்தப் பத்திரிகை சிறந்தது என்பதைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்ல அவசியமில்லாமல், பேச அழைத்த ஒரே காரணத்துக்காக எதையாவது பேசி வைப்பவர்களைப் பார்ப்பதொன்றும் புதிதில்லைதான். அதிலும் ஒரு பெண்மணி சகிக்க முடியாத தமிழில் வாழ்த்தி விட்டு, பற்றாக்குறை ஏற்பட்டு விடுமோ என்று ஆங்கிலத்திலும் வாழ்த்தி விட்டு அமர, முதல் வரிசையிலிருந்தவர்கள், "GREAT!! சூப்பரா தமிழ்ல பேசுனீங்க" என்று கூசாமல் பொய் சொல்லும்போது ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது -என்னைத்தான். இந்த எழவையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறேனே என்று.

இந்த நேரத்தில் என்னை அழைத்தார்கள். நானும் எல்லாரையும் போல, "அமீரகச் சரித்திரத்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது" என்று சொல்லி விட்டு வந்து தொலைத்திருக்கலாம். ஆனால், நாமதான் எளக்கிய வியாதியாச்சே?!! " இப்படியரு முயற்சிக்காக எனது வாழ்த்துகள். 'நகுதற் பொருட்டன்று நட்பு' என்பதால் இந்த இதழில் இடம் பெற்றுள்ள சில தவறுகளை சுட்டிக் காட்டுகிறேன். குறிப்பாக 'துபாயில் சுனாமி' என்ற செய்தி. அப்படியன்று நிகழவேயில்லை என்பதால் இது படிப்பவர்கள் மத்தியில் இந்தப் பத்திரிகை குறித்த நம்பகத்தனமைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடும். எனவே, பத்திரிகை ஆசிரியர் இன்னமும் கவனமாகவும், பொறுப்புனர்வோடும், தார்மீக நெறிக்குட்பட்டும் செய்திகளைக் கொண்டு வர முனைப்பு காட்ட வேண்டும்." என்று சொல்லி வைத்தேன்.

பேசி முடித்து விட்டு, வெளியில் கிளம்ப முனைந்தபோது சிலர் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். 'சுனாமி என்றால் அசாதாரணமான அலை என்றுதான் ஜப்பானிய மொழியில் பொருளென்றும், எனவே துபாயில் சுனாமி என்று செய்தி வெளியிட்டது சரிதானென்றும்' வாதிட்டார்கள். போதாக்குறைக்கு வாழ்த்துரை வழங்க அழைத்த இடத்தில் குறைகளைச் சொன்னது முறையற்ற செயலென்றும், இடம் பொருள் தெரியாமல் நான் பேசினேன் என்றும் சொல்லி வைத்தார்கள்.

எனக்குக் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. நான் 'தவறுகளைக் களையுங்கள்' என்று சொன்னதைக் கூட சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற இயல்பான கவலை. ஆனால், இடம் பொருள் தெரியாமல் பேசி விட்டேனென்று சொன்னது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? போன இடத்தில் கொடுத்த தேநீரைக் குடித்து விட்டு "பொத்தி"க் கொண்டு வந்திருக்க வேண்டுமென்றா? சொல்லுங்க ஐயா சொல்லுங்க.


- clock 10:53:36 - சனி, 05.02.05 -

நன்றி: காசி அண்ணாச்சி

03 February 2005

அரண்டவன் கண்ணுக்கு.......

ஒரு நாள் அலுவலகத்துக்கு என் செல் பேசியில் நண்பர் ஒருவர் அழைத்தார்.
குரலில் பதற்றம். "உங்க வீட்டுல எல்லாம் பத்திரமா இருக்காங்களா?" என்று அவர் கேள்வியைக் கேட்ட விதத்தில் எனக்குக் கொஞ்சம் பதற்றம் வரவழைக்க முனைந்தாரென்று நினைக்கிறேன். நான் வேலை அவசரத்தில், "என்ன விசயம் சொல்லுங்க?" என்றேன்.

"என்ன இவ்வளவு சாதாரணமா கேக்குறீங்க? பாதி ஊரே காணாமப் போயிடுச்சு. அஜ்மான்ல கடல் தண்ணி ஊருக்குள்ள வந்திருச்சு. ராஸ் - அல்- கைமாவுலயும் ஊருக்குள்ள தண்ணி வந்திடுச்சாம். சுனாமி இங்கயும் வந்துடுச்சுன்னு சொல்றாங்க. நீங்க என்னடான்னா ஒண்ணும் தெரியாம இருக்கீங்க,. சீக்கிரம் விசாரிங்க. சார்ஜாலயும் தண்ணி கைப்பிடிச் சுவரளவுக்கு வந்துடுச்சாம். எப்ப வேணும்னாலும் உள்ள வந்துடுமாம்" என்றார்.

எனக்குக் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது. உடனே ஏசியாநெட்டைத் தொடர்பு கொண்டேன். வந்திருக்கும் செய்தி என்ன என்பதைக் கேட்டுத் தெளிந்து கொண்டேன். கூடவே, வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்து குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்ப வேண்டாமென்று மனைவிக்கு உத்தரவிட்டேன் (இம்மாதிரி நேரங்களில்தான் இது முடியும்)

கல்·ப் நியூஸ் நாளிதழின் வலைப்பக்கத்தை மேயத் துவங்கினேன். அதில் கிடைத்த செய்திகளும், ஏசியாநெட் செய்திப் பிரிவு அளித்த தகவல்களும் பெரிதாகப் பயமுறுத்தவில்லை.

"ஷ¤மால்" என்ற கொடுங்காற்று அரேபிய வளைகுடாவில் வீசியதைத் தொடர்ந்து கடலலைகள் வழக்கத்தை விட அதிக உயரத்தில் எழும்பி வந்திருக்கின்றன. சுமார் ஒன்றரை மீட்டர் உயரமுள்ள இந்த அலைகள் அமீரகத்துக்குப் புதிது என்பதால் அஜ்மானில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் அந்தக் கடற்கரை பகுதிக்குள்ளாக நீர் நுழைந்திருக்கிறது. இதைப் போலவே ராஸ்-அல்-கைமாவிலும் நடந்திருக்கிறது. . ஆனாலும், எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் அலை காரணமாக செய்றகையாக உருவாகப்பட்டு வரும் ஈச்சை மரத் தீவுகளின் கட்டுமானங்களில் ஈடுபட்டிருந்த ஒருவர் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கிறார். கடல் அலைகளைக் கட்டுப்படுத்தும் சுவரைக் கட்டும் பணியில் இருந்தபோது இவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பதை என்னென்று சொல்வது?

இதுதான் நடந்தது. உட்கடலில் இதனால் கடல் அலைகள் சுமார் 4 மீட்டர் உயரமெழும்பியதாகவும் வானிலை மையம் தெரிவித்தது. "இதற்கும் சுனாமிக்கும் உள்ள தொடர்பு சாத்தான்குளத்தானுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு போலத்தான். ஆகவே யாரும் கவலைப்படத் தேவையில்லை" என்று தீயணைப்புத்துறை ஆறுதல் சொன்னது.

இதெல்லாம் இப்படி இருந்தும் 'இப்படி ஒன்று நடக்காதா?' என்று காத்திருந்தது போல ஆளாளுக்கு செல்பேசியில், 'சுனாமி வந்து துபாயில் இந்த இடம் காணாமல் போய்விட்டது', 'சார்ஜாவில் பாதிப் பேரைக் காணோம்' என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சுனாமி என்று ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டாலும் பட்டார்கள். 'அரண்டவன் கண்ணுக்கு ஷ¤மாலும் சுனாமிதான்' என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள் நம்மவர்கள். என் பங்குக்கும் ஏதாவது கிளப்பி விட முடியாமல் போன வருத்தம்தான் மிச்சம் கடைசியில்.

02 February 2005

வந்துட்டான்யா! வந்துட்டான்யா!

வந்துட்டான்யா! வந்துட்டான்யா! ன்னு வடிவேலு மாதிரி உங்களைப் புலம்ப வைக்குறதுக்காகவே திரும்பவும் வந்துட்டேன். அதுவும் மூக்கன் அண்ணாச்சி என்னைத் தேடுதாருன்னு கேட்டதுக்கப்புறமும் எப்படிய்யா சும்மா இருக்க முடியும்?

அதென்னமோ போங்க அண்ணாச்சி.. எந்த நேரத்துல சுனாமி வந்துச்சோ தெரியலை, எனக்கும் சுனாமி காய்ச்சல் வந்து பாடாய்படுத்திட்டு போயிட்டு.(இப்படிச் சொன்னதுக்காக என்னைத் தொவச்சு காயப் போட்டுடாதிங்கவே!!) மக்கா, 102, 103 டிகிரின்னு உடம்பு கொதிக்கல்லா செஞ்சுது.ஆனாலும் வீட்டுல இருக்க முடியல. அலுவலகத்துல ஓய்வு ஒழிச்சல் இல்லாம கடுமையான வேலை. எங்க மொதலாளி மவராசன் அவரு தாய்லாந்துல புக்கத் தீவுல வாங்குன வூடு கடல் கரையிலதான் இருக்குதா அல்லது கடலுக்குள்ளாற போயிடுச்சான்னு பாக்குறதுக்காகப் போனதால போறவன் வர்றவன் எல்லாம் என்னைக் காய்ச்சு எடுத்திட்டான். மோசமான உடல்நிலையோட இதெல்லாம் சமாளிக்க வேண்டியதாப் போச்சு.

போதாக்கொறைக்கு தொண்டை கட்டிக்கிட்டு பேசவே முடியலை. மூக்குல, எங்க ஊருல மழை வந்தா குடமுருட்டி ஆத்துல தண்ணி போவும்லா, அத மாதிரி ஓடுது. சரிதான்..சங்கை ஊதிடுவாங்களோன்னு கொஞ்சம் பயந்துகிட்டுத்தான் இருந்தேன். வானொலில கூட நேரடி ஒலிபரப்புக்குப் போகமுடியலைன்னா பாத்துக்கிடுங்க. அதுக்கப்புறம் இருக்குறதை வச்சு நிகழ்ச்சி செஞ்சேன் ஒரு வாரம்கறது வேற கதை. ரொம்ப நாளைக்கப்புறமா என்னைக் குப்புறப்படுக்கப் போட்டு ஊசி போட்டாங்க ஒரு மலையாளத்து நர்சம்மா. கல்யாணி (அட! ஆம்பளைதான்வே!!) டாக்டர் கிட்ட ஊசி போடப் போயி அவரோட கம்பவுண்டரப் பாடாப்படுத்துனது எல்லாம் ஞாபவம் வந்துச்சி. இருந்தாலும் இதுக்காகவெல்லாம் உங்களை அவ்வளவு நிம்மதியா விட்டு வைக்க மனசு வரவேயில்ல.

ஆனா, அதுக்கப்புறமும் ஒரு வாரம் ஆகியும் என்னை விட்டுப் போக மனசில்லாமத்தான் காய்ச்சல் ஒருவகையாப் போச்சுது. இதுக்கிடையில மாத்திரையும் மருந்துமா சாப்பிட்டதுல வயிறு ரொம்பக் கோபப்பட்டு "போய்யா'ன்னு சொல்லிட்டுல்லா. அதுல ஏழு கிலோ அம்போன்னு காணாம போயிடுச்சு. கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்குதுன்னு சொல்லுவாங்கள்லா, அது இதத்தான் போல இருக்கு.

ஒரு வழியா இப்பத் தேறி வந்துட்டேன். ஒரு மாசமா சொல்லாம விட்டுப் போன கதைங்கள்லாம் ரொம்ப இருக்கு. ஒவ்வொண்ணா அவுத்து விடணும். வர்றேன்.வர்றேன்..

LinkWithin

Blog Widget by LinkWithin