29 September 2012

திலகம் இழந்த மலையாளத் திரையுலகு

மலையாள சினிமாவின் பெருந்தச்சனை காலம் பறித்துக் கொண்டு விட்டது. மலையாள சினிமாவின் என்றுதான் சொல்லியாக வேண்டும் நடிப்புலகின் 'உஸ்தாதா'ன திலகனைத் தமிழ்த் திரையுலகம் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வருத்தம் தாண்டி திலகனின் பல்வேறு பாவனைகள் மனதில் ஆழமான இடத்தையே பிடித்திருக்கின்றன

திலகனின் நடிப்பில் அவரது வசன உச்சரிப்பும் வசனத்தை அவர் வெளியிடும் நேர்த்தியும்தான் சிறப்பு. கவனத்தை ஈர்க்கும் அந்தக் 'கரகர' குரல் மூலமாக எந்தக் கதாபாத்திரத்தையும் சுலபமாக வளைத்தெடுக்க முடிந்த அற்புதமான ஆற்றல் நிறைந்த நடிகன் திலகன். ஆரம்ப காலங்களில் அதிகம் கவனிக்கப்படாமல் போன திலகன், தனது இருப்பை நிரூபிக்க சில காலமானதென்றாலும் 'காட்டுகுதிர' உள்ளிட்ட படங்கள் திலகனின் திரைப்பாதையில் புதிய வழிகளைத் திறக்கச் செய்தன

'கண்ணெழுதி பொட்டும் தொட்டு' என்றொரு மலையாளப் படம். வசீகரிக்கும் மஞ்சு வாரியரிடம் வசப்பட்டு போகும் பாத்திரம் அவருக்கு.வாதம் வந்து தளர்ந்த உடல் பெண்மையின் அண்மையில் எப்படித் துள்ளாட்டம் போடுமென்பதை தனது அற்புதமான உடல்மொழியால் உணர்த்தியிருப்பார் திலகன். படுத்துக்கொண்டே அவர் செய்யும் சேட்டைகளும் மஞ்சுவைக் காணும்போதெல்லாம் ஜொள்ளொழுக அவர் காட்டும் பாவங்களும்..

திலகனுக்குக் கிரீடத்தை உருவாக்கித் தந்த படம் கிரீடம். அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோலிலும் தனது அரசாட்சியை லாலேட்டனுக்கெதிராக நிரூபித்திருப்பார் திலகன்.  மலையாள சினிமா உலகின் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனாலும் அவரது அப்பா வேசம் அலுத்துவிடாது. கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி மாயம் செய்யும் கலையெல்லாம் திலகனிடம் இல்லை. தனது பாத்திரத்தைத் தனது நடிப்பு பாணியின் மூலமாகவே தனித்துத் தெரியும்படி செய்யும் வித்தை தெரிந்த மகாகலைஞன் அவர்.

அப்பாவாக வரும்போது மிடுக்கு, பாசம், உறவுகள் தரும் வலி, குற்ற உணர்வு, மக்களிடம் இருக்கும் பேத உணர்வுகளைக் கண்டு கையாலாகாத்தன்மை என வெளிப்படும் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் முகத்தில் வித்தியாசம் காட்டத் தெரிந்தவர் திலகன். உதாரணமாக கிரீடத்தில் தன் மகனை எப்படியும் ஒரு இன்ஸ்பெக்டராக்கி  விட வேண்டுமென்று அவன் மீது நேசம் கொள்ளும் தந்தை. அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோலில் குடும்பம் சிதறிப் போக தன் மகளுக்கே மாமாவாக வேலை செய்ய நேரும் அவலம் தன் மகனுக்குத் தெரிய வரும்போது அந்தக் குற்றவுணர்ச்சியில் பொசுங்கிப் போகும் காட்சிகள்.. அதுவரை இறுக்கமான முகபாவத்தோடு மகனை வெறுத்து உலா வரும் காட்சிகளோடு ஒப்பிட்டால் திலகன் என்ற நடிகனின் பரிமாணம் பிடிப்டலாம்

பவித்ரம் படத்தில் கல்யாண வயதில் மகனிருக்க தனக்கு மகள் பிறக்கப் போகும் செய்தியறிந்து வெட்கம், கவலை, எதிர்பார்ப்பு, ஆவல் கூடவே சமூகம் செய்யப் போகும் எள்ளல் குறித்த பயம் என்று அத்தனை உணர்வுகளைம் வரிசையாக வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த கலைஞர்களாலேயே முடியும். திலகன் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்

ஸ்படிகம் - தமிழில் வீராப்பு என்று வந்ததென நினைக்கிறேன் லாலேட்டனுக்குப் பதிலாக சுந்தர் சி என்றபோதே அதிர்ந்து போயிருந்தேன். எனவே திலகனை யார் தமிழில் செய்திருப்பார்கள் என்பது குறித்து என்னால் சிந்திக்கவே முடியவில்லை. திலகனுக்கு தமிழில் மாற்று இல்லை என்றுதான் சொல்வேன்

பெருந்தச்சனைப் பற்றியோ, கல் குதிர பற்றியோ சந்தான கோபாலம் பற்றியோ சமீபத்திய இந்தியன் ருப்பி அல்லத் உஸ்தாத் ஹோட்டல் பற்றியோ என்ன சொல்வது? எல்லாமுமே திலகன் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்தான்.

குணச்சித்திர வேடங்கள் ஏற்பவர்களுக்குப் பொதுவாக நகைச்சுவை படங்களில் வேஷம் பொருந்தி வராது. ஆனால் நாடோடிக்காற்று, பஞ்சவடிப் பாலங்களில் தான் ஒரு அசாத்தியமான நகைச்சுவை நடிகரென்பதையும் நிரூபித்திருப்பார் திலகன்.

திலகனின் கடைசிநாட்கள் போராட்டம் நிறைந்தவை. தனியொரு மனிதனாக மலையாளத் திரை உலகை அவர் எதிர்த்து நிற்க நேர்ந்தது. நடிகர்கள் சங்கமான 'அம்மா' திலகனை அமைப்பிலிருந்து விலக்கம் செய்தது. திலகன் அதனைத் துணிச்சலோடு எதிர்கொண்டார்.

மம்மூட்டி, மோகன் லால் போன்ற மெகா ஸ்டார்களைக் குறித்து பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொதுக்குழு கூட்டத்தில் மம்மூட்டி 'திலகன் எங்களுக்குத் தகப்பன் மாதிரி' என்று பேசி கண்|ணீர் விட்டபோது முன்வரிசையிலிருந்து எழுந்து 'இது நீலிக்கண்ணீர்' என்று சொல்லும் மனதைரியம் அவருக்கு இருந்தது என்பதற்கு அவரது நெஞ்சுரம்தான் காரணம்.

ஆனாலும்.. அது மேலும் அவரைத் தனிமைப்படுத்தவே வழிவகுத்தது. அது திலகனுக்கும் தெரியும்தான்.என்றாலும்..அதுதான் திலகன். யாருக்கும் பயமில்லை. அந்தத் தைரியத்திற்காகவே ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் தங்களது படங்களில்  திலகனை நடிக்க வைத்தனர். அத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் திலகன் நடிப்பதை 'அம்மா' கண்டுகொள்ளவில்லை என்பதை தமிழ்த்திரையுலகு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதேதோ காரணங்களுக்காகத் திலகனைத் தனிமைப்படுத்திய மலையாள சினிமா உலகம் வெளிப்படையாகத் தனது வருத்தத்தைப் பதிவு செய்தேயாக வேண்டுமென இயக்குனர் ரஞ்சித் குறிப்பிட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது

மம்மூட்டியோடு நேரடியாக அம்மா அமைப்பில் மோதினாலும் மம்மூட்டியின் மகனோடு இணைந்து 'உஸ்தாத் ஹோட்டலில்' நடிக்க அவர் மறுக்கவில்லை. அதைப்போன்றே மம்மூட்டியும் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால் திலகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் முதலில் சென்று பார்த்தவர் மம்மூட்டி என்பதும் திலகனுக்குண்டான மருத்துவச் செலவை அம்மா அமைப்பு ஏற்கும் என்று சொன்னதும் மம்மூட்டிதான் என்பதும் தனிப்பட்ட வைராக்கியங்களைத் தாண்டி சகநடிகர்கள் மீதான அக்கறை எப்படியிருக்க வேண்டுமென்பதைப் பறை சாற்றுவதாக அமைந்துவிட்டது. (யார் யாருடைய அரசியலுக்காகவோ பலியாகிவிட்ட வடிவேலுவின் நினைவு இங்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை).

திலகனின் மறைவில் உம்மன் சாண்டியும், பினராய் விஜயனும் துக்கம் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் தோழர்களோடு இணக்கம் கொண்டிருந்தவர் திலகன். இருந்தும் கட்சி பேதமின்றி அத்தனை அரசியல் தலைவர்களும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். (தமிழகத்து அரசியல்வாதிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கவே முடியாத அளவுக்குத் தமிழக அரசியல் கெட்டழிந்து விட்டதென்பது இன்னொரு சோகம்)

தனது கலையின் மூலமாகவும் தனித்துவம் மிக்க நடிப்பின் மூலமாகவும் மட்டுமே அனைவரையும் அங்கீகரிக்க வைக்க முடிந்ததே திலகன் என்ற கலைஞனுக்கு அவனது கலைவாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி

மலையாள திரை உலகு தன் திலகம் இழந்து விட்டதென்பதைத் தவிர வேறென்ன சொல்ல? ஆழ்ந்த இரங்கல்கள் மலையாள திரையுலகின் ’ஒற்றையானு’க்கு

27 September 2012

உஸ்தாத் ஹோட்டல்

மிகப்பெரிதாக சிலாகிக்கப்பட்ட ‘தட்டத்து மராயத்தில்’ , ‘ஓர்டினரி’ படங்கள் ஏமாற்றம் தந்ததால் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல்தான் படம் பார்க்கத்துவங்கினேன் - ஆனால்..நெடுநாட்களாகி விட்டது இப்படியொரு மலையாளப் படம் பார்த்து

‘ராஜ மாணிக்கம்’ போன்ற மெகாஹிட் படம் தந்த இயக்குனர் அன்வர் ரஷீதிடம் மிகத் திறமையான இயக்குனர் ஒளிந்திருப்பதை ‘கேரள கஃபே’யில் அவர் இயக்கிய ‘ப்ரிட்ஜ்’ என்ற குறும்படம் மூலம் அறிந்ததுதான் என்றாலும் ஒருமுழுநீளப் படத்தில் அன்வர் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிறுவயதிலேயே தாயை இழந்த சிறுவன் ஃபைசல் தனது நான்கு சகோதரிகளால் வளர்க்கப்படுகிறான் பெண்களோடு வளர்ந்ததால் சமையலில் அதீதமான ஈடுபாடும் ஆர்வமும் இயல்பாகவே வந்து விடுகிறது அவனுக்கு. முன்பொருகாலத்தில் சமையலாளாக இருந்த அவனது தகப்பனாருக்கோ ஃபைசியை தனது மிகப்பெரும் வணிக அரசாங்கத்தின் ராஜாவாக்கிப் பார்க்க ஆசை. கோழிக்கோடு நகரத்தில் 5 நட்சத்திர விடுதி கட்டை அதனை மகன் நிர்வகிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார் தந்தை. மகனுக்கோ எப்படியாவது சிறந்த சமையல்காரனாக ஆசை. தந்தையிடம் ஹோட்டல் மானேஜ்மெண்ட் படிக்கப் போவதாகச் சொல்லி ஸ்விட்சர்லாந்து சென்று படித்து முடித்து ஒரு வெள்ளைக்காரியின் காதலையும் லண்டனில் ஒரு பெரும் ஹோட்டலில் வேலையையும் சம்பாதித்து இந்தியாவுக்குத் திரும்பி வரும் ஃபைசிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. விமான நிலையத்திலிருந்து நேரடியாகப் ஸஹினாவைப் பெண் பார்க்கும் படலம். பெண்ணோடு தனியாகப் பேசுகையில், தனக்கிருக்கும் ஆசைகளைச் சொல்கிறாள் ஸஹினா. திருமணத்துக்குப் பின்னரும் தான் தொடர்ந்தும் வேலை செய்ய விரும்புவதாகவும் அதற்குத் தடையேதும் இருக்கக் கூடாதென்றும் தேவைப்பட்டால் திருமணத்திற்குப் பரிசாகக் கிடைக்கப் போகும் 5 நட்சத்திர விடுதியின் \இன்டீரியர் டிசைனை\யும் தானே செய்ய விரும்புவதாகவும் சொல்ல,  தான் ஹோட்டல் மானேஹ்மெண்ட் படிக்கவில்லை என்பதைசெஃப் என்பதை வெளிப்படுத்த அதிர்ச்சியடைந்த தந்தை மகனின் பாஸ்போர்ட்டையும் கிரெடிட் கார்டுகளையும் பிடிங்கிக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி கடற்கரையில் சிறிய ஹோட்டல் நடத்தும் தனது தாத்தாவிடம் அடைக்கலமாகிறான். அங்கே சாப்பாடு ஹோட்டலின் அடிப்ப்டைகளையும் வாழ்க்கையையும் அவன் கற்றுக் கொள்வதையும் காதலை அடையாளம் காண்பதையும் செல்லுலாய்டில் சித்திரமாக்கியிருக்கிறார் அன்வர்.

படத்தின் கதையை எழுதியிருப்பவர் அஞ்சலி. ஒரு பெண் என்ப்தாலோ என்னவோ படம் முழுக்க ஒரு நிறைவுத்தன்மை இருக்கிறது. சமையலில் சேர்க்கப்படும் பதார்த்தங்களின் இயல்பைப் போல மசாலாவை அளவோடு கலந்திருப்பதோடு சிறிய அழகான வசனங்களின் மூலம் சுவையை ஏற்றியிருக்கிறார். வண்டி ஓரிடத்தில் நின்று விட லிஃப்ட் கேட்கிறான் ஃபைசி. அவன் கைகாட்டி வாகனங்கள் நிறுத்தாமல் போவதால் ஸஹினா கைகாட்ட வண்டி நிறுத்தப்படுகிறது. “பெண்களுக்கு எல்லாம் எளிது’ என்கிறான் ஃபைஸி. பர்தா அணிந்து ஃபைசி வேன் டிரைவருக்கு அருகில் அமர ஃபைசிக்கு அருகில் அமர்கிறாள் ஸஹினா. வழக்கம்போல வேன் ஓட்டுனர் ஃபைசியை பெண் என நினைத்து தனது கையை வைத்து சில்மிஷத்தைத் தொடர கடுப்பாகி ஸ்ஹினாவிடம் என்ன இது என்கிறான் மெல்லிய குரலில். ‘நீதானே பெண்களுக்கு எல்லாமே எளிதுன்னு சொன்னே’ என்கிறாள் அவள். இதுபோன்ற சின்னச் சின்ன விசயங்களில் கூட அஞ்சலி மேனன் நகைச்சுவை கல்ந்து செய்தி சொல்லியிருக்கிறார்

படம் அடிப்படையில் பேரன் ஃபைசிக்கும் தாத்தா கரீம்க்காவுக்குமான பந்தம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அதனூடாகப் பல்வேறு வாழ்க்கைச் சித்திரங்களை அலசுகிறது. தாத்தா தரும் சுலைமானி (பாலில்லாத தேநீர்)யை அருந்தி விட்டு ‘இதுல என்னமோ சேர்த்திருக்கே. என்ன இது?’ என்கிறான் பேரன். ‘மொஹப்பத் (அன்பு)’ என்கிறார் தாத்தா. படம் முழுக்க மொஹப்பத்  விரவிக் கிடக்கிறது. இந்தக் காட்சியை ஒரு கவிதையைப் போல உருவாக்கியிருக்கும் நேர்த்திக்காகவே அன்வருக்கு ஒரு தனி சபாஷ் சொல்ல வேண்டும்.

‘யார் வேண்டுமானாலும் சமைச்சு வயிற்றை நிரப்பலாம். ஆனா மனசை நிரப்புறதுதான் உண்மையான கைப்புண்ணியம்’ என்று பேரனுக்குப் பாடமெடுக்கிறார் கரீம்க்கா. ‘சமைப்பது எப்படி என்று நான் கற்றுக் கொடுத்து விட்டேன். எத்ற்காகச் சமைக்கணும் என்று கற்றுக் கொள்வதற்காக உன்னிடம் அனுப்புகிறேன்’ என்று கடிதமெழுதி மதுரைக்கு பேரனை அனுப்பி வைக்கிறார். அங்கே அவன்காணூம் காட்சிகளூம் அனுபவமும் வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தை அவனுக்கு உணர்த்துவதாக அமைகிறது - நமக்கும்

என்ன சொல்வது?
படம் முழுக்க நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. எங்கோ நடப்பது போலில்லாமல் நமக்குப் பரிச்சயமான விசயங்களாக எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது இனம் புரியாத ஓர் மகிழ்ச்சி உணர்வைப் படம் முழுக்க கண்டுகொள்ள முடிகிறது

செகண்ட் ஷோ மூலமாக அறிமுகமான மம்மூக்காவின் மகன் துல்கார் சல்மானின் நடிப்பில் அசாத்தியமான தன்னம்பிக்கை மிளிர்கிறது. சந்தேகமேயில்லாமல் திலகன் படத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார். அந்தச் சிரிப்பு அந்த உடல்மொழி அந்த வசன உச்சரிப்பு.. மரணப் படுக்கையில் கிடக்கும் இந்த மனிதன் எழுந்து வரமாட்டானா என ஏக்கம் நிறைகிறது மனதுக்குள்.. கட்டுப்பாடுகள் நிறைந்த இசுலாமிய குடும்பத்தில் பிறந்து கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஜீன்ஸ் அணிந்து பாப் பாடகியாகவும் வலம் வரும் பாத்திரத்தில் நித்யா மேனன் அசத்துகிறார். அவரது கண்களும் உதடுகளும் கிடைக்கும் நேரத்திலெல்லாம் கொல்கிறது மனதை

லோகநாதனின் நேர்த்தியான ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் நெகிழ்ச்சியான இசை, தேர்ந்தெடுத்த நடிகர்களின் உழைப்பு, மெலிதான நகைச்சுவை கலந்த வசனங்கள், மிக நேர்த்தியான கலை இயக்கம் என்று ஒரு நல்ல சினிமாவுக்குத் தேவையான முழுமையான கலவை உஸ்தாத் ஹோட்டலில் இருக்கிறது. ஆங்காங்கே வெடிச் சிரிப்பை வரவழைக்கும் அதே நேரம் சில தருணங்கள் நெகிழ்ச்சியால் கண்களைப் பனியவும் வைக்கிறதென்பதில் இயக்குனர் அன்வர் மற்றும் அஞ்சலியின் உழைப்பு தெரிகிறது. மனம் முழுக்க நிறைவு தரும் ஓர் அனுபவமாக உஸ்தாத் ஹோட்டல் இருக்கிறது. நல்ல மலையாளப் படங்களை விரும்புகிறவர்கள் தவற விடக் கூடாத படம்

09 December 2010

ரொம்ப முக்கியம் இப்போ..

"அண்ணாச்சி, சௌக்கியமா இருக்கியளா?"

"என்னடே! நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் அண்ணாச்சி உங்க புண்ணீயத்துல"

"இப்படி அடுத்தவன் புண்ணியத்திலயே கடைசி வரைக்கும் காலத்தைக் கடத்துங்கடே"

"என்ன செய்யச் சொல்லுதிய அண்ணாச்சி? நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மம்லா?!"

"எலே! என்ன இதுக்கே இப்படி அலுத்துக்கிடுத? உலகத்துல உன்னை விட பாவப்பட்டவன் எத்தனை பேரு இருக்கான்னு யோசிச்சுப் பாருடே!அப்ப நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்ட சாலின்னு உனக்கே தெரியும்?"

"என்னத்த அண்ணாச்சி சொல்லுதிய?"

"எலே! நீ தமிழ்ப் பதிவெல்லாம் படிக்கியா?"

"என்னத்துக்கு? நான் கொஞ்சம் நல்லா இருக்கது கூட உங்களுக்குப் புடிக்கலையாக்கும்? எதுக்கு இப்ப அதப் பத்திக் கேக்கிய?"

"ஏன் கேக்கம்னா, அங்குன நம்மூருகாரப் பய ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுதாண்டே! என்னத்த எழுதுதோம்னே தெரியாம ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுததைப் படிக்குறவங்களப் பத்தி யோசிச்சுப் பாருல மக்கா! அப்ப தெரியும் உன்னை விட பாவப்பட்ட ஜென்மங்களும் இருக்குன்னு"

"அப்ப இந்தக் கொடுமை தொடங்கி இன்னைக்கு ஏழாவது வருசத் துவக்கமா? அடக் கடவுளே? யாரு அண்ணாச்சி அந்தக் கொடுமைக்கார பய?"

"அதாம்டே நம்ம சாத்தான்குளத்துக்காரப் பய இருக்காம்லாடே! ஊரு பேரைக் கெடுக்குததுக்குன்னே எழுதிக்கிட்டு கெடக்கான் பாத்துக்க. அவங்கப்பா அம்மா மேல என்ன கோவமோ தெரியல. டிசம்பர் ஒம்பதாம் தேதி அவுக கல்யாண நாளாம். அவங்க கல்யாண நாளும் அதுவுமால்லா பதிவு தொடங்குறதுன்னு ஒரு அராஜக முடிவெடுத்திருக்கான்?!"

"'பேரு சொல்லுத புள்ளையா இல்லாம போனாலும் பேரைக் கெடுக்காத தொல்லையாவது இருந்து தொலைடே!ன்னு அவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?"

"அங்கதாம்ல மக்கா பிரச்னையே இருக்கு?"

"என்ன பிரச்னை.அவன் ஒரு முடிவெடுத்துட்டா அவன் பேச்சை அவனே கேக்க மாட்டானாம்ல"

"அப்படின்னா "இனிமே தொடர்ந்து பதிவை எழுதுறேண்டே!"ன்னு முடிவெடுக்கச் சொல்லுங்க. அப்படியாவது அவன் பேச்சை அவனே கேட்காம எழுதாம இருக்கானான்னு பார்க்கலாம்"

"எனக்கும் ஆசைதான். ஆனா, ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவா போவுது?"

*****

இதுவும் பழைய பதிவுதான். 2004ஆம் ஆண்டில் துவங்கிய கோட்டித்தனம் இன்னமும் முடியாமல் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த, கற்றுக் கொண்ட, இழந்த, பெற்ற விசயங்கள் தாராளம். ஏராளம்.

// அறிவுபூர்வமா, ஆக்க பூர்வமா, இலக்கிய சாம்பார்,ரசம் எல்லாம் சொட்டும் வகையில் எழுதிட மாட்டேங்குற ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் என்னால உத்தரவாதமாத் தர முடியும். அதனால பயப்படாதீங்க!! //

இதுதான் என் வலைப்பூவை துவங்கியபோது நான் மக்களுக்களித்த வாக்குறுதி அதை எப்போதும் தொடர்வேன் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

நல்லா இருங்கடே!!

10 November 2010

பிராஞ்சியேட்டனும் புனித பிரான்சிஸும்

ரஞ்சித் இயக்கத்தில் ‘கேரளா கஃபே’யும் ரஞ்சித் மம்மூட்டி கூட்டணியில் பலேரி மாணிக்கமும் ,’கையொப்பும் பார்த்து மகிழ்ந்த உற்சாகத்தில் மீண்டும் மம்மூட்டி - ரஞ்சித் கூட்டணியில் ஒரு படம் என்றதும் நிறைய எதிர்பார்ப்புடனும் ஏகெனவே பிரஜாபதி என்ற பாடாவதி படத்தைத் தந்திருந்ததால் கொஞ்சம் பயமுமாகவே பிராஞ்சியேட்டன் த செயிண்ட் படம் பார்க்கச் சென்றேன் நல்ல வேளையாக இந்தக் கூட்டணி என்னை ஏமாற்றவில்லை.

செறம்மல் எனாசு பிரான்சிஸ் - அரிசி வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்து அதன் மூலம் பல கோடிகள் சம்பாதித்திருக்கும் பிரான்சிஸை அனைவரும் அழைப்பதென்னவோ பிராஞ்ஜியேட்டன் என்று. அதை விடக் கொடுமை அரிசி விற்பனை குடும்ப வியாபாரம் என்பதால் பிரான்சிஸை ’அரி(சி)பிராஞ்சி’ என்றழைப்பதுதான்.. கோடிகள் இருந்தாலும் இந்த பட்டப்பெயரைச் சுமப்பது பெரும் அவமானமாக இருக்கிறது பிராஞ்சிக்கு :-) சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெயரெடுத்தபின் கல்வித்தந்தைகளாக மாறி விடும் தமிழக செல்வந்தர்களைப் போல பெரும் செல்வந்தனானதும் தனது கல்வியின்மையை மறைத்து வைப்பதற்காகவும் தனது பட்டப்பெயரைத்
துடைத்து நீக்கவுமாக பிராஞ்சி மேற்கொள்ளும் முயற்சிகளும் (பத்மஸ்ரீ பட்டம் வாங்க முற்படுவது உட்பட) ஒவ்வொருமுறையும் முயற்சிகளில் தோற்பதும் கடைசியில் பட்டங்களை விடவும் நல்ல மனிதனாக வாழ்வது முக்கியமெனத் தீர்மானிப்பதும்தான் படத்தின் மையக் கதை.

ஆனால், இந்தக் கதையை தெளிந்த நீரோடையில் குளிக்கும் அலாதியான ஆனந்த அனுபவத்தோடு சொல்லியிருக்கிறார் ரஞ்சித். கதைக்குள் நாமே ஒரு பாத்திரமாக மாறி நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற நிலையை உருவாக்க ரஞ்சித்தால் முடிந்திருக்கிறது. புனித பிரான்சிஸை ஒரு கதாபாத்திரமாக உருவாக்கி சம சமூகத்தில் உலவவிடும் சாமர்த்தியமெல்லாம் ரஞ்சித் போன்று வித்தியாசமாக யோசிப்பவர்களுக்கே சாத்தியமாகும் போலும்.யதார்த்த உலகிற்கும் மாய உலகிற்குமான இந்தப் பயணத்தை ரஞ்சித் மிகச் சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்

இயக்குனர் ரஞ்சித்தைப் பொறுத்தவரை படத்துக்குப் படம் வேறுபடும் அவரது கதை சொல்லும் பாங்குதான் அவரைத் திறமைமிக்க இயக்குனராக அடையாளம் காட்டுகிறதென்று சொல்ல வேண்டும். பிரான்சிஸ் என்ற மனிதன புனித பிரான்சிஸோடு உரையாடும் காட்சியோடு தொடங்கும் படம் முழுக்க நிறைந்து நிற்கும் அங்கதமும் சமூகம் மீதான கேலியும் கிண்டலும் ரஞ்சித்தின் அற்புதமான கதை சொல்லும் போக்கும் இந்தப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. சமூகத்தின் மீதான கேலி என்றால் போகிற போக்கில் அல்ல. ரஞ்சித் அதற்குண்டான அழுத்தத்தோடே அதனைப் பதிப்பதுதான் ரஞ்சித்தின் அபரிமிதமான திறமை. அரசியல், மதம்,வணிகம், மனிதாபிமானம் என்று எல்லாப்பக்கஙக்ளையும் தொட்டுச் செல்லும் ரஞ்சித்தின் பேனா நகைச்சுவையைப் பரவலாக அள்ளித் தெளித்து கயிற்றின் மேல் நடக்கும் இந்த வித்தையை மிக எளிதானதாக்கியிருக்கிறது

புனித பிரான்சிஸோடு பிராஞ்சி உரையாடும் தருணங்களெல்லாம் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம். அதைப் போன்றே பதம்ஸ்ரீ விருது வாங்க பிராஞ்சி செய்யும் முயற்சிகளும் இயல்பான நகைச்சுவையால் மிளிர்கிறது.(அதற்குப் பின்னாலிருக்கும் அரசியலை நேரடியாகச் சாடாமல் அதை ஒரு பகடியாக முன்னெடுத்திருக்கும் ரஞ்சித்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை) ஒரு நடுத்தர வயது மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளைக் கூட மிகுந்த எழுச்சியோடு சொல்லியிருப்பதில் ரஞ்சித்தின் மிளிரும் வசனங்களுக்குப் பெரும் பங்குண்டு

மம்மூக்கா - இந்தக் கதாபாத்திரத்தைச் செய்வதற்காகவே அவதரித்த மனிதனைப் போல வாழ்ந்திருக்கிறார் மனிதன். ராஜமாணிக்கம் போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரம் ஏற்றிருந்தாலும் ஒரு முற்றிலும் புதிய பரிமாணத்தில் கலக்கியிருக்கிறார் இந்தப் படத்தில்  . கதாபாத்திரத்தின் திருச்சூர் வட்டாரப் பேச்சு வழக்கில் கலக்கினாலும், அப்படிப்  பேசுவது மட்டுமே இந்தப் பாத்திரத்தை முழுமைப்படுத்தாதென்றுணர்ந்து அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார் மம்மூக்கா. அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் முக பாவங்களும் ... அற்புதம்

இன்னசெண்ட், ப்ரியா மணி ஜெகதி, டிம்மி டாம், சித்தீக் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் (புனித பிரான்சிஸ்), குஷ்பூ என்று அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக வாசு மேனனாக வரும் இன்னசெண்டை இப்படிப் பார்த்து எத்தனை நாட்களாயிற்று? புகுந்து விளையாடியிருக்கிறார் இன்னசெண்ட். அரிபிராஞ்சி என்ற பெயரை துடைப்பதற்காக அவர் சொல்லும் திட்டங்களும் அது தோற்கும்போது அடுத்தத் திட்டத்திற்கான முனைப்புடன் அவர் காட்டும் சவடாலும்..கலக்கல்.

படத்தின் இரண்டாம் பாகம் இன்னமும் கொஞ்சம் நறுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் கூட அது ஒரு பெரும் குறையாகத் தென்படவில்லை. ஔசேப்பச்சனின் இதமான பின்னணி இசையும் வேணுவின் உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.படத்தின் இறுதியில் இது ஒரு ரஞ்சித் குழுவினரின் படமென்று போடுகிறார்கள் அப்படிப்போடுவதற்கான தகுதியும் பெருமையும் நிச்சயம் அவருக்குண்டு.

தவிர்க்கப்பட முடியாத மலையாள திரைப்படங்களில் ”பிராஞ்சியேட்டன் & த செயிண்ட்” டுக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு

26 October 2010

மலையாளத்தில் வேட்டைக்காரன்

லாலேட்டன் என்ற அற்புதமான நடிகனை ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்த்தி வைத்து வெறும் படம் காட்டிக் கொண்டிருந்த இயக்குனர்கள் மத்தியிலிருந்து ஒருவேளை வெளியேறாமலேயே போய்விடுவாரோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்தான் அவருக்கும் நமக்கும் ஆறுதலாக வந்திருக்கிறது “ஷிக்கார்’ திரைப்படம்

கடந்த காலத்தின் இறக்கி வைக்க முடியாத பாரங்கள் துரத்தி வேட்டையாடும் பலராமன் என்ற லாரி டிரைவர். பல்ராமனுக்குப் பின்னால் எப்போதும் மறைந்திருக்கும் எதிரிகளின் கால் நடமாட்டம். இதனாலேயே பலராமனின் வாழ்க்கை நிச்சயமில்லாத கேள்விக்குறியாகிறது. சந்தர்ப்பங்களுக்கு இரையாகும் நாயகனை சந்தர்ப்பங்களே வேட்டையாடும் கதைதான் இந்த மலையாள வேட்டைக்காரன்

 ‘ஈற்ற’(மூங்கில்) வெட்டும் காலம் குறித்தும் அதன் பின்னணியில் சிற்றாழ என்ற ஊர் தயாராவது குறித்துமான ஆரம்ப காட்சிகள் அது தொடர்பான ஏதோசுவாரஸ்யமான சம்பவஙக்ளைச் சொல்லப்போகிறதோ என்று பார்த்தால் லாலேட்டன் ‘லோரி’ ஓட்டி வந்து நின்று சண்டை போட ஆரம்பித்ததும் ‘தொலைஞ்சுதுடா சாமி!’ என்ற அலுப்பு துவங்கியது. தொடர்ந்த ஜெகதி மற்றும் சுராஜ் வெஞ்ஞாரம்மூடு (என்ன எழவு பேருடா இது?!) இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் அடித்த லூட்டிகள் மேலும் அலுப்பைத் தந்து ‘கடைசியில் என் விதி இப்படியாயாகணும்’ என்று யோசிக்கத் துவங்கிய வேளையில் படம் சூடுபிடிக்கத் துவங்கியது.

இடைவேளைக்குப் பின் ஆந்திர மாநிலத்தை நோக்கிய கதையின் பின்னகர்வுதான் கதையை முன்பகுதிக்குச் சற்றும் தொடர்பில்லாமல் அதி வேகத்துடன் நகர்கிறது. அப்துல்லா என்ற மக்கள் இயக்கத் தலைவனை நக்சலைட் என்று போலிஸ் வளைத்துப்பிடிக்க முனைகிறது. ஆந்திரமாநிலத்தில் காவலராகப் பணியாற்றும் பலராமன் அப்துல்லா வீட்டிற்குச் சென்று தந்திரமாக அப்துல்லாவை போலிஸ் வளையில் விழ வைக்கிறார். அப்துல்லாவை தந்திரமாக அழைத்துச் செல்லும் அந்த ஜீப் பயணத்தில் தந்திரமாகக் கைது செய்யப்பட்ட பின்னரும் ஆத்திரப்படாத, தான் சகப்போவது குறித்த கவலையின்றி  ’என் மக்களுக்குச் செய்ய வேண்டிய நிறைய பணிகள் மிச்சமிருக்கின்றன’ என்று மட்டுமே ஆயாசப்படுகிற நக்ஸலைட் என்று அதிகார வர்க்கத்தால் முத்திரை குத்தப்பட்ட அப்துல்லா என்ற மாந்த நேயம் மிக்க மனிதனின் மறுமுகம் தெரிய வருகிறது.

பலராமன் முன்னிலையிலேயே அப்துல்லா குண்டுகளுக்கிரையாக அப்துல்லாவின் மனைவி தனது கணவனின் இறப்புக்குக் காரணமான பலராமனைத் தேடி வந்து அவனால்தான் தன் கணவ்ன் கொல்லப்பட்டான் என்பதை தனது மகனுக்குச் சொல்லி விட்டு பலராமன் முன்னிலையிலேயே துப்பாக்கியால் தன்னைச் சுட்டு மாண்டு போகிறாள். தான் அறியாமல் செய்த கொலைக்காகத் தன்னை வேட்டையாடும் நக்சல்களுக்குப் பயந்து விசாகப்பட்டினம் செல்லும் பலராமன் அங்கு அப்துல்லாவின் ஆதரவாளர்களின் பழிவாங்கும் செயல் காரணமாக மனைவியை இழக்கிறான். தான் மேலும் வேட்டையாடப்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக மீதமிருக்கும் தன் மகளின் வாழ்க்கையை முன்னிட்டு  கேரளாவில் அடர்காடு நிறைந்த சிற்றாழவிற்கு பலராமன் குடிபெயர்கிறான் என்றாலும் அங்கும் அவனைத் தேடி வருகிறது அறியாமல் உடந்தையாகிப் போன கொலையின் நிழல். அதை எப்படி பலராமன் எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் உச்ச காட்சி.

கரன் தாப்பருடனான சமீபத்திய நேர்முகம் ஒன்றில் ஆசாத் என்ற மாவோயிஸ்டை அரசு தந்திரமாகக்  கொன்றது குறித்து அருந்ததி ராய்  பேசியிருந்தார். படத்தின் பின் பகுதியைப் பார்க்கும்போது இந்த நேர்முகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அதிகாரவர்க்கம் தனது கோரக்கரங்களை தனது இலக்கிற்கெதிரானவர்கள் மீது திணித்து கழுத்தை நெறிக்க முனைவதைக் கத்தியின் மேல் நடக்கும் லாவகத்துடன் திரைக்கதையாக்கியிருக்கிறார் சுரேஷ் பாபு. இதற்காகவே முன்பாதியை அங்குமிங்குமாக அலைய விட்ட அவரை மன்னிக்கலாம்.

தோழர் அப்துல்லாவாக தனது ‘ஜனதா’வை முன்னேற்றத் துடிக்கும் துடிப்புள்ள போராட்டக்கார இளைஞனாக மிகச் சிறிய பாத்திரமென்றாலும் அசாத்தியமாகச் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. மோகன்லாலின் மகளாக நாடோடிகள் நாயகி அனன்யாவும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்
ஸ்னேஹா ஒரு பாடலுக்கு லாலேட்டனுடன் நடித்துவிட்டு அநியாயத்துக்கு அரிவாள் வெட்டுப்பட்டு செத்துப் போகிறார்.மிகச்சிறிய பாத்திரமென்றாலும் லக்‌ஷ்மியின் பாத்திரம் படத்திற்கு கனம் சேர்க்கிறது. தன் மகனைப் பார்த்து ‘இவன் தான் உன் தகப்பன் சாகக் காரணமானவன். இந்த முகத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்’என்று கண்களில் ஆவேசம் கொப்பளிக்க அவர் பேசும்போது அந்தப்பெரிய கண்கள் நிறையவே பேசுகின்றன

லாரி டிரைவராக லாலேட்டன் வரும்போது ’ப்ரம்மரம்’ நினைவுக்கு வருவதையும், ஒரு நக்சலைட்டுடன் ஈர்க்கப்படும் வித்தியாசமான சூழல் ‘தலப்பாவு’ படத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் லால் மீண்டும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். தான் வேட்டையாடப்படுவோமென்ற உணர்வுடனும் பதைப்புடனும் அவர் இயங்கும்பொழுதுகளில் அவரது உடல்மொழியும் அவரது முகபாவனைகளும் அவர் ஏன் நல்ல நடிகராகப் போற்றப்படுகிறார் என்பதைச் சொல்லிவிடுகிறது

என்றாலும்
படத்தின் நாயகன் என்னைப் பொறுத்தவரையிலும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பிள்ளைதான்.. கடவுளின் சொந்த நாட்டை அத்தனை அழகாக உள்வாங்கியிருக்கிறது அவரது கண்கள். அடர் காடுகளும் அருவிகளும் ஓடைகளும் வறண்ட புழுதி பூமியும் கண்களுக்குப் பெரும் விருந்தாகியிருக்கிறது. வழக்கமான ஆதிரப்பள்ளியைத்தாண்டியும் காடுகள் இருப்பதும் அந்தக் காட்டினுள் தன்னிஷ்டத்துக்கு காமெரா புகுந்து விளையாடியிருப்பதும் மிக மிக நேர்த்தி. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ’சிற்றாழ’யோடு இணையும்போது பெருநகரக் கான்க்ரீட் காட்டில் வசிக்கும் எனக்குப் பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை

முற்பகுதியை மோகன்லாலுக்காக வணிகப்படுத்த முயலாமல், லால் போடும் தமிழ்ப்பாட்டு குத்தாட்டம், சூரஜின் நகைச்சுவை இம்சைகளைத் தவிர்த்து இன்னமும் நறுக்காகச் செய்திருந்தால் படத்தின் நீளத்தைக் குறைத்து இன்னமும் மனதில் ஆழமாகப் பதியும்படியாகச் செய்திருக்கலாம்தான். என்றாலும் இரண்டாம்பகுதியில்  திரைக்கதை நகரும் வேகமும் சொல்லப்பட்டிருக்கும் சேதியும் மிகச் சிறந்த நடிகர்களின் ஆளுமையும் இந்தப் படத்தைத் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாகச் செய்துவிடுகின்றன

பத்மராஜன் என்ற இளைஞர் இயக்கிய திரைப்படம் இது. மலையாளத் திரை உலகில் புதிய எண்ணங்களோடும் திறமையோடும் புதிய இயக்குனர்கள் வலம்வரத் துவங்குவது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான்

இந்த வேட்டைக்காரன் பார்க்கப்படவேண்டியவன் தான்

LinkWithin

Blog Widget by LinkWithin