09 December 2010

ரொம்ப முக்கியம் இப்போ..

"அண்ணாச்சி, சௌக்கியமா இருக்கியளா?"

"என்னடே! நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன் அண்ணாச்சி உங்க புண்ணீயத்துல"

"இப்படி அடுத்தவன் புண்ணியத்திலயே கடைசி வரைக்கும் காலத்தைக் கடத்துங்கடே"

"என்ன செய்யச் சொல்லுதிய அண்ணாச்சி? நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மம்லா?!"

"எலே! என்ன இதுக்கே இப்படி அலுத்துக்கிடுத? உலகத்துல உன்னை விட பாவப்பட்டவன் எத்தனை பேரு இருக்கான்னு யோசிச்சுப் பாருடே!அப்ப நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்ட சாலின்னு உனக்கே தெரியும்?"

"என்னத்த அண்ணாச்சி சொல்லுதிய?"

"எலே! நீ தமிழ்ப் பதிவெல்லாம் படிக்கியா?"

"என்னத்துக்கு? நான் கொஞ்சம் நல்லா இருக்கது கூட உங்களுக்குப் புடிக்கலையாக்கும்? எதுக்கு இப்ப அதப் பத்திக் கேக்கிய?"

"ஏன் கேக்கம்னா, அங்குன நம்மூருகாரப் பய ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுதாண்டே! என்னத்த எழுதுதோம்னே தெரியாம ஒருத்தன் ஆறு வருஷமா எழுதுததைப் படிக்குறவங்களப் பத்தி யோசிச்சுப் பாருல மக்கா! அப்ப தெரியும் உன்னை விட பாவப்பட்ட ஜென்மங்களும் இருக்குன்னு"

"அப்ப இந்தக் கொடுமை தொடங்கி இன்னைக்கு ஏழாவது வருசத் துவக்கமா? அடக் கடவுளே? யாரு அண்ணாச்சி அந்தக் கொடுமைக்கார பய?"

"அதாம்டே நம்ம சாத்தான்குளத்துக்காரப் பய இருக்காம்லாடே! ஊரு பேரைக் கெடுக்குததுக்குன்னே எழுதிக்கிட்டு கெடக்கான் பாத்துக்க. அவங்கப்பா அம்மா மேல என்ன கோவமோ தெரியல. டிசம்பர் ஒம்பதாம் தேதி அவுக கல்யாண நாளாம். அவங்க கல்யாண நாளும் அதுவுமால்லா பதிவு தொடங்குறதுன்னு ஒரு அராஜக முடிவெடுத்திருக்கான்?!"

"'பேரு சொல்லுத புள்ளையா இல்லாம போனாலும் பேரைக் கெடுக்காத தொல்லையாவது இருந்து தொலைடே!ன்னு அவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?"

"அங்கதாம்ல மக்கா பிரச்னையே இருக்கு?"

"என்ன பிரச்னை.அவன் ஒரு முடிவெடுத்துட்டா அவன் பேச்சை அவனே கேக்க மாட்டானாம்ல"

"அப்படின்னா "இனிமே தொடர்ந்து பதிவை எழுதுறேண்டே!"ன்னு முடிவெடுக்கச் சொல்லுங்க. அப்படியாவது அவன் பேச்சை அவனே கேட்காம எழுதாம இருக்கானான்னு பார்க்கலாம்"

"எனக்கும் ஆசைதான். ஆனா, ஆசைப்பட்டதெல்லாம் நடக்கவா போவுது?"

*****

இதுவும் பழைய பதிவுதான். 2004ஆம் ஆண்டில் துவங்கிய கோட்டித்தனம் இன்னமும் முடியாமல் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த, கற்றுக் கொண்ட, இழந்த, பெற்ற விசயங்கள் தாராளம். ஏராளம்.

// அறிவுபூர்வமா, ஆக்க பூர்வமா, இலக்கிய சாம்பார்,ரசம் எல்லாம் சொட்டும் வகையில் எழுதிட மாட்டேங்குற ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் என்னால உத்தரவாதமாத் தர முடியும். அதனால பயப்படாதீங்க!! //

இதுதான் என் வலைப்பூவை துவங்கியபோது நான் மக்களுக்களித்த வாக்குறுதி அதை எப்போதும் தொடர்வேன் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

நல்லா இருங்கடே!!

10 November 2010

பிராஞ்சியேட்டனும் புனித பிரான்சிஸும்

ரஞ்சித் இயக்கத்தில் ‘கேரளா கஃபே’யும் ரஞ்சித் மம்மூட்டி கூட்டணியில் பலேரி மாணிக்கமும் ,’கையொப்பும் பார்த்து மகிழ்ந்த உற்சாகத்தில் மீண்டும் மம்மூட்டி - ரஞ்சித் கூட்டணியில் ஒரு படம் என்றதும் நிறைய எதிர்பார்ப்புடனும் ஏகெனவே பிரஜாபதி என்ற பாடாவதி படத்தைத் தந்திருந்ததால் கொஞ்சம் பயமுமாகவே பிராஞ்சியேட்டன் த செயிண்ட் படம் பார்க்கச் சென்றேன் நல்ல வேளையாக இந்தக் கூட்டணி என்னை ஏமாற்றவில்லை.

செறம்மல் எனாசு பிரான்சிஸ் - அரிசி வியாபாரத்தில் கொடி கட்டிப்பறந்து அதன் மூலம் பல கோடிகள் சம்பாதித்திருக்கும் பிரான்சிஸை அனைவரும் அழைப்பதென்னவோ பிராஞ்ஜியேட்டன் என்று. அதை விடக் கொடுமை அரிசி விற்பனை குடும்ப வியாபாரம் என்பதால் பிரான்சிஸை ’அரி(சி)பிராஞ்சி’ என்றழைப்பதுதான்.. கோடிகள் இருந்தாலும் இந்த பட்டப்பெயரைச் சுமப்பது பெரும் அவமானமாக இருக்கிறது பிராஞ்சிக்கு :-) சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பெயரெடுத்தபின் கல்வித்தந்தைகளாக மாறி விடும் தமிழக செல்வந்தர்களைப் போல பெரும் செல்வந்தனானதும் தனது கல்வியின்மையை மறைத்து வைப்பதற்காகவும் தனது பட்டப்பெயரைத்
துடைத்து நீக்கவுமாக பிராஞ்சி மேற்கொள்ளும் முயற்சிகளும் (பத்மஸ்ரீ பட்டம் வாங்க முற்படுவது உட்பட) ஒவ்வொருமுறையும் முயற்சிகளில் தோற்பதும் கடைசியில் பட்டங்களை விடவும் நல்ல மனிதனாக வாழ்வது முக்கியமெனத் தீர்மானிப்பதும்தான் படத்தின் மையக் கதை.

ஆனால், இந்தக் கதையை தெளிந்த நீரோடையில் குளிக்கும் அலாதியான ஆனந்த அனுபவத்தோடு சொல்லியிருக்கிறார் ரஞ்சித். கதைக்குள் நாமே ஒரு பாத்திரமாக மாறி நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற நிலையை உருவாக்க ரஞ்சித்தால் முடிந்திருக்கிறது. புனித பிரான்சிஸை ஒரு கதாபாத்திரமாக உருவாக்கி சம சமூகத்தில் உலவவிடும் சாமர்த்தியமெல்லாம் ரஞ்சித் போன்று வித்தியாசமாக யோசிப்பவர்களுக்கே சாத்தியமாகும் போலும்.யதார்த்த உலகிற்கும் மாய உலகிற்குமான இந்தப் பயணத்தை ரஞ்சித் மிகச் சாமர்த்தியமாகச் செய்திருக்கிறார்

இயக்குனர் ரஞ்சித்தைப் பொறுத்தவரை படத்துக்குப் படம் வேறுபடும் அவரது கதை சொல்லும் பாங்குதான் அவரைத் திறமைமிக்க இயக்குனராக அடையாளம் காட்டுகிறதென்று சொல்ல வேண்டும். பிரான்சிஸ் என்ற மனிதன புனித பிரான்சிஸோடு உரையாடும் காட்சியோடு தொடங்கும் படம் முழுக்க நிறைந்து நிற்கும் அங்கதமும் சமூகம் மீதான கேலியும் கிண்டலும் ரஞ்சித்தின் அற்புதமான கதை சொல்லும் போக்கும் இந்தப்படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. சமூகத்தின் மீதான கேலி என்றால் போகிற போக்கில் அல்ல. ரஞ்சித் அதற்குண்டான அழுத்தத்தோடே அதனைப் பதிப்பதுதான் ரஞ்சித்தின் அபரிமிதமான திறமை. அரசியல், மதம்,வணிகம், மனிதாபிமானம் என்று எல்லாப்பக்கஙக்ளையும் தொட்டுச் செல்லும் ரஞ்சித்தின் பேனா நகைச்சுவையைப் பரவலாக அள்ளித் தெளித்து கயிற்றின் மேல் நடக்கும் இந்த வித்தையை மிக எளிதானதாக்கியிருக்கிறது

புனித பிரான்சிஸோடு பிராஞ்சி உரையாடும் தருணங்களெல்லாம் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம். அதைப் போன்றே பதம்ஸ்ரீ விருது வாங்க பிராஞ்சி செய்யும் முயற்சிகளும் இயல்பான நகைச்சுவையால் மிளிர்கிறது.(அதற்குப் பின்னாலிருக்கும் அரசியலை நேரடியாகச் சாடாமல் அதை ஒரு பகடியாக முன்னெடுத்திருக்கும் ரஞ்சித்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை) ஒரு நடுத்தர வயது மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் தோல்விகளைக் கூட மிகுந்த எழுச்சியோடு சொல்லியிருப்பதில் ரஞ்சித்தின் மிளிரும் வசனங்களுக்குப் பெரும் பங்குண்டு

மம்மூக்கா - இந்தக் கதாபாத்திரத்தைச் செய்வதற்காகவே அவதரித்த மனிதனைப் போல வாழ்ந்திருக்கிறார் மனிதன். ராஜமாணிக்கம் போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரம் ஏற்றிருந்தாலும் ஒரு முற்றிலும் புதிய பரிமாணத்தில் கலக்கியிருக்கிறார் இந்தப் படத்தில்  . கதாபாத்திரத்தின் திருச்சூர் வட்டாரப் பேச்சு வழக்கில் கலக்கினாலும், அப்படிப்  பேசுவது மட்டுமே இந்தப் பாத்திரத்தை முழுமைப்படுத்தாதென்றுணர்ந்து அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார் மம்மூக்கா. அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் முக பாவங்களும் ... அற்புதம்

இன்னசெண்ட், ப்ரியா மணி ஜெகதி, டிம்மி டாம், சித்தீக் ஜெஸ்ஸி ஃபாக்ஸ் (புனித பிரான்சிஸ்), குஷ்பூ என்று அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக வாசு மேனனாக வரும் இன்னசெண்டை இப்படிப் பார்த்து எத்தனை நாட்களாயிற்று? புகுந்து விளையாடியிருக்கிறார் இன்னசெண்ட். அரிபிராஞ்சி என்ற பெயரை துடைப்பதற்காக அவர் சொல்லும் திட்டங்களும் அது தோற்கும்போது அடுத்தத் திட்டத்திற்கான முனைப்புடன் அவர் காட்டும் சவடாலும்..கலக்கல்.

படத்தின் இரண்டாம் பாகம் இன்னமும் கொஞ்சம் நறுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டாலும் கூட அது ஒரு பெரும் குறையாகத் தென்படவில்லை. ஔசேப்பச்சனின் இதமான பின்னணி இசையும் வேணுவின் உறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.படத்தின் இறுதியில் இது ஒரு ரஞ்சித் குழுவினரின் படமென்று போடுகிறார்கள் அப்படிப்போடுவதற்கான தகுதியும் பெருமையும் நிச்சயம் அவருக்குண்டு.

தவிர்க்கப்பட முடியாத மலையாள திரைப்படங்களில் ”பிராஞ்சியேட்டன் & த செயிண்ட்” டுக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு

26 October 2010

மலையாளத்தில் வேட்டைக்காரன்

லாலேட்டன் என்ற அற்புதமான நடிகனை ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்த்தி வைத்து வெறும் படம் காட்டிக் கொண்டிருந்த இயக்குனர்கள் மத்தியிலிருந்து ஒருவேளை வெளியேறாமலேயே போய்விடுவாரோ என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்தான் அவருக்கும் நமக்கும் ஆறுதலாக வந்திருக்கிறது “ஷிக்கார்’ திரைப்படம்

கடந்த காலத்தின் இறக்கி வைக்க முடியாத பாரங்கள் துரத்தி வேட்டையாடும் பலராமன் என்ற லாரி டிரைவர். பல்ராமனுக்குப் பின்னால் எப்போதும் மறைந்திருக்கும் எதிரிகளின் கால் நடமாட்டம். இதனாலேயே பலராமனின் வாழ்க்கை நிச்சயமில்லாத கேள்விக்குறியாகிறது. சந்தர்ப்பங்களுக்கு இரையாகும் நாயகனை சந்தர்ப்பங்களே வேட்டையாடும் கதைதான் இந்த மலையாள வேட்டைக்காரன்

 ‘ஈற்ற’(மூங்கில்) வெட்டும் காலம் குறித்தும் அதன் பின்னணியில் சிற்றாழ என்ற ஊர் தயாராவது குறித்துமான ஆரம்ப காட்சிகள் அது தொடர்பான ஏதோசுவாரஸ்யமான சம்பவஙக்ளைச் சொல்லப்போகிறதோ என்று பார்த்தால் லாலேட்டன் ‘லோரி’ ஓட்டி வந்து நின்று சண்டை போட ஆரம்பித்ததும் ‘தொலைஞ்சுதுடா சாமி!’ என்ற அலுப்பு துவங்கியது. தொடர்ந்த ஜெகதி மற்றும் சுராஜ் வெஞ்ஞாரம்மூடு (என்ன எழவு பேருடா இது?!) இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் அடித்த லூட்டிகள் மேலும் அலுப்பைத் தந்து ‘கடைசியில் என் விதி இப்படியாயாகணும்’ என்று யோசிக்கத் துவங்கிய வேளையில் படம் சூடுபிடிக்கத் துவங்கியது.

இடைவேளைக்குப் பின் ஆந்திர மாநிலத்தை நோக்கிய கதையின் பின்னகர்வுதான் கதையை முன்பகுதிக்குச் சற்றும் தொடர்பில்லாமல் அதி வேகத்துடன் நகர்கிறது. அப்துல்லா என்ற மக்கள் இயக்கத் தலைவனை நக்சலைட் என்று போலிஸ் வளைத்துப்பிடிக்க முனைகிறது. ஆந்திரமாநிலத்தில் காவலராகப் பணியாற்றும் பலராமன் அப்துல்லா வீட்டிற்குச் சென்று தந்திரமாக அப்துல்லாவை போலிஸ் வளையில் விழ வைக்கிறார். அப்துல்லாவை தந்திரமாக அழைத்துச் செல்லும் அந்த ஜீப் பயணத்தில் தந்திரமாகக் கைது செய்யப்பட்ட பின்னரும் ஆத்திரப்படாத, தான் சகப்போவது குறித்த கவலையின்றி  ’என் மக்களுக்குச் செய்ய வேண்டிய நிறைய பணிகள் மிச்சமிருக்கின்றன’ என்று மட்டுமே ஆயாசப்படுகிற நக்ஸலைட் என்று அதிகார வர்க்கத்தால் முத்திரை குத்தப்பட்ட அப்துல்லா என்ற மாந்த நேயம் மிக்க மனிதனின் மறுமுகம் தெரிய வருகிறது.

பலராமன் முன்னிலையிலேயே அப்துல்லா குண்டுகளுக்கிரையாக அப்துல்லாவின் மனைவி தனது கணவனின் இறப்புக்குக் காரணமான பலராமனைத் தேடி வந்து அவனால்தான் தன் கணவ்ன் கொல்லப்பட்டான் என்பதை தனது மகனுக்குச் சொல்லி விட்டு பலராமன் முன்னிலையிலேயே துப்பாக்கியால் தன்னைச் சுட்டு மாண்டு போகிறாள். தான் அறியாமல் செய்த கொலைக்காகத் தன்னை வேட்டையாடும் நக்சல்களுக்குப் பயந்து விசாகப்பட்டினம் செல்லும் பலராமன் அங்கு அப்துல்லாவின் ஆதரவாளர்களின் பழிவாங்கும் செயல் காரணமாக மனைவியை இழக்கிறான். தான் மேலும் வேட்டையாடப்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக மீதமிருக்கும் தன் மகளின் வாழ்க்கையை முன்னிட்டு  கேரளாவில் அடர்காடு நிறைந்த சிற்றாழவிற்கு பலராமன் குடிபெயர்கிறான் என்றாலும் அங்கும் அவனைத் தேடி வருகிறது அறியாமல் உடந்தையாகிப் போன கொலையின் நிழல். அதை எப்படி பலராமன் எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் உச்ச காட்சி.

கரன் தாப்பருடனான சமீபத்திய நேர்முகம் ஒன்றில் ஆசாத் என்ற மாவோயிஸ்டை அரசு தந்திரமாகக்  கொன்றது குறித்து அருந்ததி ராய்  பேசியிருந்தார். படத்தின் பின் பகுதியைப் பார்க்கும்போது இந்த நேர்முகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அதிகாரவர்க்கம் தனது கோரக்கரங்களை தனது இலக்கிற்கெதிரானவர்கள் மீது திணித்து கழுத்தை நெறிக்க முனைவதைக் கத்தியின் மேல் நடக்கும் லாவகத்துடன் திரைக்கதையாக்கியிருக்கிறார் சுரேஷ் பாபு. இதற்காகவே முன்பாதியை அங்குமிங்குமாக அலைய விட்ட அவரை மன்னிக்கலாம்.

தோழர் அப்துல்லாவாக தனது ‘ஜனதா’வை முன்னேற்றத் துடிக்கும் துடிப்புள்ள போராட்டக்கார இளைஞனாக மிகச் சிறிய பாத்திரமென்றாலும் அசாத்தியமாகச் செய்திருக்கிறார் சமுத்திரக்கனி. மோகன்லாலின் மகளாக நாடோடிகள் நாயகி அனன்யாவும் தன் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்
ஸ்னேஹா ஒரு பாடலுக்கு லாலேட்டனுடன் நடித்துவிட்டு அநியாயத்துக்கு அரிவாள் வெட்டுப்பட்டு செத்துப் போகிறார்.மிகச்சிறிய பாத்திரமென்றாலும் லக்‌ஷ்மியின் பாத்திரம் படத்திற்கு கனம் சேர்க்கிறது. தன் மகனைப் பார்த்து ‘இவன் தான் உன் தகப்பன் சாகக் காரணமானவன். இந்த முகத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்’என்று கண்களில் ஆவேசம் கொப்பளிக்க அவர் பேசும்போது அந்தப்பெரிய கண்கள் நிறையவே பேசுகின்றன

லாரி டிரைவராக லாலேட்டன் வரும்போது ’ப்ரம்மரம்’ நினைவுக்கு வருவதையும், ஒரு நக்சலைட்டுடன் ஈர்க்கப்படும் வித்தியாசமான சூழல் ‘தலப்பாவு’ படத்தையும் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் லால் மீண்டும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். தான் வேட்டையாடப்படுவோமென்ற உணர்வுடனும் பதைப்புடனும் அவர் இயங்கும்பொழுதுகளில் அவரது உடல்மொழியும் அவரது முகபாவனைகளும் அவர் ஏன் நல்ல நடிகராகப் போற்றப்படுகிறார் என்பதைச் சொல்லிவிடுகிறது

என்றாலும்
படத்தின் நாயகன் என்னைப் பொறுத்தவரையிலும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பிள்ளைதான்.. கடவுளின் சொந்த நாட்டை அத்தனை அழகாக உள்வாங்கியிருக்கிறது அவரது கண்கள். அடர் காடுகளும் அருவிகளும் ஓடைகளும் வறண்ட புழுதி பூமியும் கண்களுக்குப் பெரும் விருந்தாகியிருக்கிறது. வழக்கமான ஆதிரப்பள்ளியைத்தாண்டியும் காடுகள் இருப்பதும் அந்தக் காட்டினுள் தன்னிஷ்டத்துக்கு காமெரா புகுந்து விளையாடியிருப்பதும் மிக மிக நேர்த்தி. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ’சிற்றாழ’யோடு இணையும்போது பெருநகரக் கான்க்ரீட் காட்டில் வசிக்கும் எனக்குப் பெருமூச்சு எழுவதைத் தவிர்க்க இயலவில்லை

முற்பகுதியை மோகன்லாலுக்காக வணிகப்படுத்த முயலாமல், லால் போடும் தமிழ்ப்பாட்டு குத்தாட்டம், சூரஜின் நகைச்சுவை இம்சைகளைத் தவிர்த்து இன்னமும் நறுக்காகச் செய்திருந்தால் படத்தின் நீளத்தைக் குறைத்து இன்னமும் மனதில் ஆழமாகப் பதியும்படியாகச் செய்திருக்கலாம்தான். என்றாலும் இரண்டாம்பகுதியில்  திரைக்கதை நகரும் வேகமும் சொல்லப்பட்டிருக்கும் சேதியும் மிகச் சிறந்த நடிகர்களின் ஆளுமையும் இந்தப் படத்தைத் தவிர்க்க முடியாத படங்களில் ஒன்றாகச் செய்துவிடுகின்றன

பத்மராஜன் என்ற இளைஞர் இயக்கிய திரைப்படம் இது. மலையாளத் திரை உலகில் புதிய எண்ணங்களோடும் திறமையோடும் புதிய இயக்குனர்கள் வலம்வரத் துவங்குவது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான்

இந்த வேட்டைக்காரன் பார்க்கப்படவேண்டியவன் தான்

04 October 2010

எந்திரன் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்

எங்கு பார்த்தாலும் எப்படிப் பார்த்தாலும் எந்திரன்.
வழக்கம் போல அயோத்யா போன்ற முக்கியமனா விசயங்களைக் கூட மறக்கடித்து மழுங்கடித்து இதைப்பார்க்காவிட்டால் வாழ்க்கையே முடிந்து போய்விடுமென்ற பிரமையில் வாழ்பவர்களுக்கு மத்தியில் நானும் எந்திரன் பார்க்க நேர்ந்தது

படத்தை விட படம் வருவதற்கு முன்னரும் வந்த பின்னரும் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் தந்த எரிச்சலே மிஞ்சியிருந்தது. வட இந்திய ஊடகங்கள் வேறு கடவுளையும் ரஜனியையும் கேள்வி கேட்க முடியாதென்று குழந்தைத்தனமாக உளறியிருந்தது.

கடவுளாகவே இருந்தால் என்ன?
குற்றமென்று கண்டால் கேள்வி கேட்போமென்று கேட்டிருக்கிறார் அபி.
நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் சுட்டிக் காட்டும் தமிழ்ப்பரம்பரையில் வந்த அபியின் எந்திரன் பார்வை இங்கே உங்களுக்காக.

எல்லா எந்திரன் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் :-)

26 September 2010

கவலைப்படாதீர்கள் சாரு!

சகிக்க முடியாத வேதனையோடும் விரக்தியோடும் இந்தப் பதிவை எழுதும் சூழலுக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். வேறு வழியேயில்லையா என்று என்னை நானே கேட்டுக் கொண்டபோதும் இதற்கான வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டது முதல் மனது அரற்றிக் கொண்டேயிருக்கிறது.இப்படி ஓர் சூழல் நிகழுமென்று அறிந்திருந்தால் - இப்படி சென்னைவாசிகள் எல்லாரும்- ஏன் ஒட்டு மொத்தத் தமிழகமுமே கையை விரித்திருக்குமென்று தெரிந்திருந்தால் முன்னதாகவே மாற்று ஏற்படுகளைச் செய்திருக்க முடியுமே என்ற நிலையில் இன்னமும் என்னை நானே ஆற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறேன் நான்.

ஆனாலும் இப்படி ஒரு அநியாயத்தைச் செய்ய எப்படி மனது வருகிறது இவர்களுக்கு? அந்த அளவுக்கா ஒரு சமூகம் கெட்டழிந்து போக வேண்டும்? கலை, கலாசார, இலக்கியச் சூழல்கள் செத்து மடிந்து போன ஒரு நாட்டில் இதைத்தான் எதிர்பார்க்க முடியுமென்றாலும் எஞ்சியிருக்கும் கொஞ்ச மனசாட்சிக்குப் பயந்தாவது ஏதேனும் செய்யப்பட்டிருக்கலாம்.

“எலே! சவத்து மூதி. என்ன எழவுன்னு சொல்லிட்டு சலம்பித் தொலையம்லே!’ன்னு யாராவது கேட்கக் கூடும். விசயம் ரொம்ப எளிதானது. எந்திரனுக்கு டிக்கெட் கேட்டாராம் சாரு. யாரும் எடுத்துக் கொடுக்கவில்லையாம். அவர் தனது தளத்தில் வெந்து தணிந்திருப்பதைப் பார்த்தபோது இதைப்போல இன்னும் எத்தனை எழுத்தாளர்கள் வெந்து மனதுக்குள் புலம்புகிறார்களோ என்ற இரக்க உணர்வு வந்துவிட்டது. அதிலும் மற்றவர்களாவது பரவாயில்லை. தமிழ்ப்பத்திரிகைகளிலோ அல்லது பதிவுகளிலோ எந்திரனைக் குதறப் போகிறவர்கள். சாருவோ மலையாளப் ப்த்திரிகையில் சென்று எந்திரன் சரியில்லை என்று எழுதக் காத்திருப்பவர்.அவருக்கு அந்த வாய்ப்பை மறுத்ததன் மூலம் அவரது அழியாப் புகழுக்கு மேலும் களங்கம் கற்பிக்கவே இந்தத் தமிழ்ச்சமூகம் தலைப்படுகிறதென என்னால் உணர முடிகிறது

கவலைப்படாதீர்கள் சாரு!
அடுத்த முறை ரஜனியின் படம் வெளியாகும்போது உங்களை அமீரகம் அழைத்து வந்து ‘கான்கார்டு’ சினிமாவிலோ அல்லது ‘கலேரியா’ திரையரங்கிலோ படம் பார்க்க வைத்து அதன் மூலம் மலையாள ரசிகர்களுக்கு உங்களது சூடான விமர்சனத்தை வழங்கும் வாய்ப்பை எப்பாடுபட்டாவது பார்த்துக் கொள்கிறோம். இதன் மூலம் உலகத் திரை விமர்சனங்களில் முதன்முறையாக நாடு விட்டு நாடு வந்து விமர்சனம் எழுதிய முதல் உலக எழுத்தாளர் என்ற பெருமை உங்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம் செத்துப் போன தமிழ்ச்சூழல் மீண்டும் உயிர்த்தெழும் புண்ணியமும் உங்களையே வந்தடையும்.

என்ன ஒரு சிக்கலென்றால்...
அடுத்த ரஜனி படம் வரும் வரைக்கும் தமிழ்ச்சூழல் மேலும் மேலும் செத்துப் போகாமலிருக்க நீங்கள் உங்கள் வைத்தியத்தை தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். ரஜனி படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்காக இந்தத் தியாகத்தைக்கூட செய்ய மாட்டீர்களா என்ன?

சாருவோட படத்தைப் போடத்தான் நெனச்சேன். இந்தப் பொண்ணு பேரும் சாரு (அரோரா) தானாம். ஹிஹி அதான்

LinkWithin

Blog Widget by LinkWithin