மலையாள சினிமாவின் பெருந்தச்சனை காலம் பறித்துக் கொண்டு விட்டது. மலையாள
சினிமாவின் என்றுதான் சொல்லியாக வேண்டும் நடிப்புலகின் 'உஸ்தாதா'ன திலகனைத்
தமிழ்த் திரையுலகம் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வருத்தம்
தாண்டி திலகனின் பல்வேறு பாவனைகள் மனதில் ஆழமான இடத்தையே
பிடித்திருக்கின்றனதிலகனின் நடிப்பில் அவரது வசன உச்சரிப்பும் வசனத்தை அவர் வெளியிடும் நேர்த்தியும்தான் சிறப்பு. கவனத்தை ஈர்க்கும் அந்தக் 'கரகர' குரல் மூலமாக எந்தக் கதாபாத்திரத்தையும் சுலபமாக வளைத்தெடுக்க முடிந்த அற்புதமான ஆற்றல் நிறைந்த நடிகன் திலகன். ஆரம்ப காலங்களில் அதிகம் கவனிக்கப்படாமல் போன திலகன், தனது இருப்பை நிரூபிக்க சில காலமானதென்றாலும் 'காட்டுகுதிர' உள்ளிட்ட படங்கள் திலகனின் திரைப்பாதையில் புதிய வழிகளைத் திறக்கச் செய்தன
'கண்ணெழுதி பொட்டும் தொட்டு' என்றொரு மலையாளப் படம். வசீகரிக்கும் மஞ்சு வாரியரிடம் வசப்பட்டு போகும் பாத்திரம் அவருக்கு.வாதம் வந்து தளர்ந்த உடல் பெண்மையின் அண்மையில் எப்படித் துள்ளாட்டம் போடுமென்பதை தனது அற்புதமான உடல்மொழியால் உணர்த்தியிருப்பார் திலகன். படுத்துக்கொண்டே அவர் செய்யும் சேட்டைகளும் மஞ்சுவைக் காணும்போதெல்லாம் ஜொள்ளொழுக அவர் காட்டும் பாவங்களும்..
திலகனுக்குக் கிரீடத்தை உருவாக்கித் தந்த படம் கிரீடம். அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோலிலும் தனது அரசாட்சியை லாலேட்டனுக்கெதிராக நிரூபித்திருப்பார் திலகன். மலையாள சினிமா உலகின் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனாலும் அவரது அப்பா வேசம் அலுத்துவிடாது. கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி மாயம் செய்யும் கலையெல்லாம் திலகனிடம் இல்லை. தனது பாத்திரத்தைத் தனது நடிப்பு பாணியின் மூலமாகவே தனித்துத் தெரியும்படி செய்யும் வித்தை தெரிந்த மகாகலைஞன் அவர்.
அப்பாவாக வரும்போது மிடுக்கு, பாசம், உறவுகள் தரும் வலி, குற்ற உணர்வு, மக்களிடம் இருக்கும் பேத உணர்வுகளைக் கண்டு கையாலாகாத்தன்மை என வெளிப்படும் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் முகத்தில் வித்தியாசம் காட்டத் தெரிந்தவர் திலகன். உதாரணமாக கிரீடத்தில் தன் மகனை எப்படியும் ஒரு இன்ஸ்பெக்டராக்கி விட வேண்டுமென்று அவன் மீது நேசம் கொள்ளும் தந்தை. அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோலில் குடும்பம் சிதறிப் போக தன் மகளுக்கே மாமாவாக வேலை செய்ய நேரும் அவலம் தன் மகனுக்குத் தெரிய வரும்போது அந்தக் குற்றவுணர்ச்சியில் பொசுங்கிப் போகும் காட்சிகள்.. அதுவரை இறுக்கமான முகபாவத்தோடு மகனை வெறுத்து உலா வரும் காட்சிகளோடு ஒப்பிட்டால் திலகன் என்ற நடிகனின் பரிமாணம் பிடிப்டலாம்
பவித்ரம் படத்தில் கல்யாண வயதில் மகனிருக்க தனக்கு மகள் பிறக்கப் போகும் செய்தியறிந்து வெட்கம், கவலை, எதிர்பார்ப்பு, ஆவல் கூடவே சமூகம் செய்யப் போகும் எள்ளல் குறித்த பயம் என்று அத்தனை உணர்வுகளைம் வரிசையாக வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த கலைஞர்களாலேயே முடியும். திலகன் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
ஸ்படிகம் - தமிழில் வீராப்பு என்று வந்ததென நினைக்கிறேன் லாலேட்டனுக்குப் பதிலாக சுந்தர் சி என்றபோதே அதிர்ந்து போயிருந்தேன். எனவே திலகனை யார் தமிழில் செய்திருப்பார்கள் என்பது குறித்து என்னால் சிந்திக்கவே முடியவில்லை. திலகனுக்கு தமிழில் மாற்று இல்லை என்றுதான் சொல்வேன்
பெருந்தச்சனைப் பற்றியோ, கல் குதிர பற்றியோ சந்தான கோபாலம் பற்றியோ சமீபத்திய இந்தியன் ருப்பி அல்லத் உஸ்தாத் ஹோட்டல் பற்றியோ என்ன சொல்வது? எல்லாமுமே திலகன் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரங்கள்தான்.
குணச்சித்திர வேடங்கள் ஏற்பவர்களுக்குப் பொதுவாக நகைச்சுவை படங்களில் வேஷம் பொருந்தி வராது. ஆனால் நாடோடிக்காற்று, பஞ்சவடிப் பாலங்களில் தான் ஒரு அசாத்தியமான நகைச்சுவை நடிகரென்பதையும் நிரூபித்திருப்பார் திலகன்.
திலகனின் கடைசிநாட்கள் போராட்டம் நிறைந்தவை. தனியொரு மனிதனாக மலையாளத் திரை உலகை அவர் எதிர்த்து நிற்க நேர்ந்தது. நடிகர்கள் சங்கமான 'அம்மா' திலகனை அமைப்பிலிருந்து விலக்கம் செய்தது. திலகன் அதனைத் துணிச்சலோடு எதிர்கொண்டார்.
மம்மூட்டி, மோகன் லால் போன்ற மெகா ஸ்டார்களைக் குறித்து பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொதுக்குழு கூட்டத்தில் மம்மூட்டி 'திலகன் எங்களுக்குத் தகப்பன் மாதிரி' என்று பேசி கண்|ணீர் விட்டபோது முன்வரிசையிலிருந்து எழுந்து 'இது நீலிக்கண்ணீர்' என்று சொல்லும் மனதைரியம் அவருக்கு இருந்தது என்பதற்கு அவரது நெஞ்சுரம்தான் காரணம்.
ஆனாலும்.. அது மேலும் அவரைத் தனிமைப்படுத்தவே வழிவகுத்தது. அது திலகனுக்கும் தெரியும்தான்.என்றாலும்..அதுதான் திலகன். யாருக்கும் பயமில்லை. அந்தத் தைரியத்திற்காகவே ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் தங்களது படங்களில் திலகனை நடிக்க வைத்தனர். அத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் திலகன் நடிப்பதை 'அம்மா' கண்டுகொள்ளவில்லை என்பதை தமிழ்த்திரையுலகு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதேதோ காரணங்களுக்காகத் திலகனைத் தனிமைப்படுத்திய மலையாள சினிமா உலகம் வெளிப்படையாகத் தனது வருத்தத்தைப் பதிவு செய்தேயாக வேண்டுமென இயக்குனர் ரஞ்சித் குறிப்பிட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது
மம்மூட்டியோடு நேரடியாக அம்மா அமைப்பில் மோதினாலும் மம்மூட்டியின் மகனோடு இணைந்து 'உஸ்தாத் ஹோட்டலில்' நடிக்க அவர் மறுக்கவில்லை. அதைப்போன்றே மம்மூட்டியும் அதுகுறித்து எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால் திலகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் முதலில் சென்று பார்த்தவர் மம்மூட்டி என்பதும் திலகனுக்குண்டான மருத்துவச் செலவை அம்மா அமைப்பு ஏற்கும் என்று சொன்னதும் மம்மூட்டிதான் என்பதும் தனிப்பட்ட வைராக்கியங்களைத் தாண்டி சகநடிகர்கள் மீதான அக்கறை எப்படியிருக்க வேண்டுமென்பதைப் பறை சாற்றுவதாக அமைந்துவிட்டது. (யார் யாருடைய அரசியலுக்காகவோ பலியாகிவிட்ட வடிவேலுவின் நினைவு இங்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை).
திலகனின் மறைவில் உம்மன் சாண்டியும், பினராய் விஜயனும் துக்கம் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் தோழர்களோடு இணக்கம் கொண்டிருந்தவர் திலகன். இருந்தும் கட்சி பேதமின்றி அத்தனை அரசியல் தலைவர்களும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். (தமிழகத்து அரசியல்வாதிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கவே முடியாத அளவுக்குத் தமிழக அரசியல் கெட்டழிந்து விட்டதென்பது இன்னொரு சோகம்)
தனது கலையின் மூலமாகவும் தனித்துவம் மிக்க நடிப்பின் மூலமாகவும் மட்டுமே அனைவரையும் அங்கீகரிக்க வைக்க முடிந்ததே திலகன் என்ற கலைஞனுக்கு அவனது கலைவாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி
மலையாள திரை உலகு தன் திலகம் இழந்து விட்டதென்பதைத் தவிர வேறென்ன சொல்ல? ஆழ்ந்த இரங்கல்கள் மலையாள திரையுலகின் ’ஒற்றையானு’க்கு


